சென்னை: சென்னையில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, வரும் நவம்பர் 5-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில், தேங்கியுள்ள மழைநீரால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், 1913 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
அதேபோல், சென்னை மாநகராட்சியில் உள்ள வெள்ளத்தடுப்பு கட்டுப்பாட்டு அறையை 044-25619206, 044-25619207 மற்றும் 044-25619208 என்ற தொலைபேசி வழியாகவும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதுதவிர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை செயலி” மற்றும் மாநகராட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவும் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZWh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvODkwNjE0LWNoZW5uYWktaGVhdnktcmFpbi1oZWxwbGluZS1udW1iZXJzLW5vdGlmaWNhdGlvbi5odG1s0gEA?oc=5