சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பத்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்குத் திசையில் தமிழகம், புதுவை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல், அதனையொட்டிய கடற்கரை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மட்டுமல்லாமல் டெல்டா, தென் மாவட்டங்களில் பரவலான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், சென்னையின் நீர் ஆதாரங்களாக உள்ள ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என நீர்வள ஆதாரத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் வேண்டுகோளை ஏற்று சென்னை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையின் புறநகர் பகுதிகளிலிருந்து வெளியேறிய நீரால், ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் மழை, வெள்ளத்தில் மூழ்கிப்போனது.
அதுபோன்ற சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைக்குமாறு மாநகராட்சி சார்பில் நீர்வள ஆதாரத் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரிகள் மட்டுமல்லாமல், சென்னை மாநகரப் பகுதிக்குள் உள்ள கொரட்டூர், மாதவரம், கொளத்தூர், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஏரிகளின் நீர் அளவையும் குறைத்து வைக்குமாறு நீர்வள ஆதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து குறிப்பிட்ட அளவிலான நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiQWh0dHBzOi8vd3d3LnRhbWlsbXVyYXN1LmNvbS5zZy90YW1pbG5hZHUvc3RvcnkyMDIyMTEwOS05OTMyMy5odG1s0gEA?oc=5