கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் விஜயபாஸ்கரின் அசையா சொத்து … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு சிபிஐ தரப்பில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2016ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அவர் லஞ்சம் கொடுத்ததாக எழுதி வைத்திருந்த ஒரு டைரியை பறிமுதல் செய்தனர். இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இந்நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது.

இதை தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த முறை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை 7 பேருக்கு எதிராக வழக்கை நடத்த மட்டுமே மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிழைகளை முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், யார் யாருக்கு எதிராக வழக்கை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.  அப்போது, இந்த வழக்கிற்கு தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துகளை விடுவிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கின் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யாத நிலையில் சொத்துகளை விடுவிக்க  முடியாது என்று மறுத்து உத்தரவிட்டார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjI3NjLSAQA?oc=5