செம்பரம்பாக்கம் ஏரி 87 சதவீதம் நிரம்பியது- சென்னை குடிநீர் ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பெய்த பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

இதையடுத்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து கடந்த வாரம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால் உபரி நீர் திறப்பும் குறைக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளும் மொத்தம் 10 ஆயிரத்து 133 மி.கன அடி தண்ணீர் (10.1 டி.எம்.சி.) உள்ளது.

கடந்த வாரம் 9-ந்தேதி நிலவரப்படி ஏரிகளில் மொத்தம் 8,630 மி.கனஅடி (8.6 டி.எம்.சி.) தண்ணீர் இருந்தது. கனமழை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் குடிநீர் ஏரிகளுக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதே நாளில் 11 ஆயிரம் மில்லியன் கன அடியை தாண்டி தண்ணீர் (11 டி.எம்.சி.) தண்ணீர் இருந்தது. கடந்த ஆண்டை விட 1 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது என்றாலும் அடுத்த ஆண்டு முழுவதும் சென்னை நகர மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்திலும் பலத்த மழை கொட்டி இருப்பதால் அங்குள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் தற்போது 3,164 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு 59 கன அடி தண்ணீர் வருகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. இதில் 2,776 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 391 கன அடி தண்ணீர் வருகிறது. 287 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மி.கன அடியில் 823 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 38 கன அடி நீர் வருகிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி ஆகும். இதில் 2,836 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 2,303 மி.கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு 2,150 கன அடி தண்ணீர் வருகிறது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiVGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL2NoZW1iYXJhbWJha2thbS1sYWtlLTg3LXBlcmNlbnQtZmlsbGVkLTU0OTc5MdIBWGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS9jaGVtYmFyYW1iYWtrYW0tbGFrZS04Ny1wZXJjZW50LWZpbGxlZC01NDk3OTE?oc=5