‘ஒரு படத்தை விமர்சனங்கள் வாயிலாக மட்டுமே பார்க்க வேண்டாம்’ – விஜய் சேதுபதி – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

மாமனிதன் படத்துக்கான சிறந்த நடிகர் விருதுக்காக வழங்கப்பட்ட பரிசுத் தொகையை சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் கமிட்டிக்கு நன்கொடையாக வழங்குகிறேன் என்று கூறினார் விஜய் சேதுபதி.

சென்னை சத்யம் திரையரங்கில் 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த விழா நிறைவு நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திரைப்பட விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற 12 படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

குறிப்பாக, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி மாணவர்களின் குறும்படத்திற்கான விருதுகளும் இரண்டாவதாக தமிழ் திரைப்பட விருதுகளும் வழங்கப்பட்டது. அழகி – லோகநாதன் மற்றும் ஊமை விழி (Spl Mention) ஆகிய குறும்படங்கள் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி மாணவர்களின் குறும்படத்திற்கான விருதுகள் வென்றன. Best student Film Award திரை கல்வி விருது ‘ஊமை விழி’ படத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், திரையிடப்பட்ட 12 தமிழ் படங்களில் 9 படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Best Actress – கார்கி (சாய் பல்லவி)

Best Actor (2) – மாமனிதன் (விஜய் சேதுபதி), கிடா (‘பூ’ ராமு)

2nd Best Film – கசடதபற (சிம்புதேவன்)

Best Cinematography – இரவின் நிழல் (பார்த்திபன்)

Best Audiography – நட்சத்திரம் நகர்கிறது (Anthony Ruben)

Best Editing – பிகினிங் (BEGINNING)

Special Jury Award – இரவின் நிழல்

Special Mention (Certificate) Award – ஆதார்

சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடா படத்துக்கு வழங்கப்பட்டது.

விழா மேடையில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, ”வாழ்க்கையின் அனுபவங்கள், திரைப்படங்களாக மாறி வருகின்றன. முடிந்த அளவுக்கு ஒரு திரைப்படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சிறந்த படங்கள் எல்லோராலும் எடுக்கப்பட்டு வருகிறது. திரைப்படம் மூலம், 50 வருடம் வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை, வெறும் இரண்டரை மணி நேரத்தில் சொல்ல முடியும். ஆகவே எந்த ஒரு படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்க வேண்டாம். விமர்சனங்கள் பார்வையில் படம் பார்க்கப்படுவது சரியா என்று எனக்கு தெரியவில்லை.

மாமனிதன் படத்துக்கான சிறந்த நடிகர் விருதுக்காக வழங்கப்பட்ட பரிசுத் தொகையை சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் கமிட்டிக்கு நன்கொடையாக வழங்குகிறேன். மாமனிதன் படத்துக்காக விருது வாங்கியதில் மிகவும் மகிழ்ச்சி” என்றார். மேலும் பேசுகையில், “2022 முடியப்போகிறது. இந்த ஆண்டு எப்படி முடிந்திருந்தாலும் பரவாயில்லை. அடுத்த ஆண்டை அனைவரும் புதியதாக தொடங்குங்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

முன்னதாக இரவின் நிழல் திரைப்படத்திற்கு 2 விருதுகள் பெற்ற இயக்குனர் பார்த்திபன் பேசும்போது, ”நாளையின் சினிமாவான உங்கள் எல்லோருக்கும் வணக்கம். நான் என் குருநாதரின் (இயகுனர், திரைக்கதை ஆசிரியர் கே.பாக்யராஜ்) காலை தொட்டு கும்பிட்டேன். இப்போது இந்த விருதினை தொட்டு கும்பிடுகிறேன். சிலருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு கிடைத்துள்ள இந்த விருது எனை பெற்ற தாய்க்கும், நான் பெற்ற குழந்தைக்கும் சமம்” என்றார்.

image

திரைப்பட விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், ”எல்லா புகழும் இறைவனுக்கே என்று நான் சொல்ல மாட்டேன். எல்லா புகழும் என் ரசிகர்களுக்கே. விருதினை பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த விருதினை தவறவிட்டவர்களுக்கு அடுத்த முறை மீண்டும் விருது பெறுவதற்கு முன்னதாகவே என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்த்திபா… உனக்கும் எனக்கும் தான் அடுத்த முறை போட்டி. அதற்காக நான் தயாராகிக் கொண்டு இருக்கிறேன். மேடையில் நின்று குருவாகிய நான் சிஷ்யனுக்கு சவால் விடுகிறேன்” என்றார். மேலும் பேசுகையில், “இந்நிகழ்ச்சிக்கு நான் சிறப்பு விருந்தினராக வந்த காரணம், என்னுடைய குருநாதர் பாரதிராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுப்பததற்காகவும், என்னுடைய சிஷ்யன் பார்த்திபன் அதிக விருதுகளை பெற்றதற்காகவும் தான். பாரதிராஜாவின் உடல் சரியில்லாத காரணத்தினால் அவர் இங்கு வர முடியவில்லை” என்றார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiQFodHRwczovL3d3dy5wdXRoaXlhdGhhbGFpbXVyYWkuY29tL25ld3N2aWV3LzE1MjgxMS9UaGUtMjB0aC1DaGVubmFpLUludGVybmF0aW9uYWwtRmlsbS1GZXN0aXZhbC1zdGFydGVkLW9uLTE1dGgtYXQtQ2hlbm5haS1TYXR5YW0tVGhlYXRyZdIBjAFodHRwczovL3d3dy5wdXRoaXlhdGhhbGFpbXVyYWkuY29tL2FtcC9hcnRpY2xlLzE1MjgxMS9UaGUtMjB0aC1DaGVubmFpLUludGVybmF0aW9uYWwtRmlsbS1GZXN0aXZhbC1zdGFydGVkLW9uLTE1dGgtYXQtQ2hlbm5haS1TYXR5YW0tVGhlYXRyZQ?oc=5