இலங்கை சிறையில் இருந்து விடுவித்த 24 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை:  தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 24 மீனவர்கள், கடந்த நவம்பர் 28ம் தேதி 5 படகுகளில் இந்திய எல்லை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு அதிகாலையில் வந்த இலங்கை கடற்படையினர், 24 மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதினார்.

இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசி, 24 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். கடந்த 12ம் தேதி இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 24 தமிழக மீனவர்களை நீதிமன்றம் விடுவித்தது. 24 தமிழக மீனவர்களும் இந்தியா வருவதற்கு தேவையான எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கப்பட்டன.  இந்நிலையில், நேற்று  இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து 24 மீனவர்கள் விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, காலை உணவு வழங்கி, அவர்களின் சொந்த ஊர்களுக்கு தனித்தனி வாகனங்களில் வழியனுப்பி வைத்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjUwNDnSAQA?oc=5