சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 5 பேர் … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: தேனாம்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் பைக் ரேஸ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும், வீலிங் என்ற பெயரில் ஆபத்தான முறையிலும் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடாமல் தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் குழுவினருடன் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, சென்னை பெருநகரில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து, பைக் ரேஸ் மற்றும் வீலிங் என்ற பெயரில் இருசக்கர வாகனத்தில் அபாயகரமாக செல்லும் நபர்களை கைது செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 25.12.2022 அன்று அதிகாலை சுமார் 01.30 மணியளவில், அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் அருகே சிலர் சுமார் 10 இருசக்கர வாகனங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் ஓட்டியதாக கிடைத்த புகாரின்பேரில், காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அந்த நபர்கள் இருசக்கர வாகனங்களுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன் பேரில் மேற்படி சம்பவம் குறித்து R-4 பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி சம்பவத்தில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டிய 1.ஆகாஷ், வ/19, த/பெ.இளையமாறன், ஹாஜி உசேன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை, 2.சரண்ராஜ் (எ) டேவிட், வ/19, த/பெ.தமிழ்செல்வன், கஜபதி தெரு, ராஜாஜி நகர், திருவல்லிக்கேணி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 டியோ இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (26.12.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளை பிடிக்க காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இதே போல, கடந்த 25.12.2022 அன்று அதிகாலை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை பிலால் ஓட்டல் அருகே சுமார் 6 இருசக்கர வாகனங்களில் சென்ற நபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் ஓட்டியதாக கிடைத்த புகாரின்பேரில், காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து,  மேற்படி சம்பவம் குறித்து D-6 அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

D-6 அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி இருசக்கர வாகனங்களை அபாயகரமாகவும், அதிவேகமாகவும் ஓட்டிய 1.பிரதீப், வ/21, த/பெ.காண்டீபன், குதிரத்அலி மக்கான் தெரு, திருவல்லிக்கேணி, 2.சையது அராபத், வ/21 த/பெ.பஷீர், பெர்தோ தெரு, இராயப்பேட்டை, 3.சூர்யா (எ) அருள்வாசன், வ/20, த/பெ.ஐயப்பன், வி.எம். தெரு, இராயப்பேட்டை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (26.12.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளை பிடிக்க காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjYwMDTSAQA?oc=5