சென்னை, கோவை மாநகராட்சிகளுக்கான சொத்து வரி உயர்வு அரசாணை செல்லும்: ஐகோர்ட் உத்தரவு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ம் தேதி சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்த அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது, மனுதாரர்கள் தரப்பில், சொத்து வரியை கணக்கிட முறையான நடைமுறை  பின்பற்றப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், சென்னை மாநகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகினர். அட்வகேட் ஜெனரல் வாதிடும்போது, சென்னையில் 1998ம் ஆண்டுக்கு பின் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. வரியை உயர்த்துவதற்கான அவசியம் குறித்தும் ஆவண ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, மக்கள் நலத் திட்டங்களுக்கு தேவையான நிதியையும், அரசின் செலவினங்களுக்காகவும்  வருவாயை திரட்டுவதும், வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் சமன்படுத்துவதும் ஒரு மக்கள் நல அரசுக்கு அவசியமாகிறது. சொத்து வரியை உயர்த்துவது குறித்த அரசாணை என்பது ஆலோசனையாக உள்ளதே தவிர, உத்தரவாக இல்லை. இந்த அரசாணையின் அடிப்படையில், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு காரணங்கள் உள்ளன. எனவே, சொத்து வரி உயர்த்துவது தொடர்பான அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும்.

சென்னையை பொறுத்தவரை சொத்துவரி செலுத்தும் 15 லட்சம் பேரில், 30 பேர் தெரிவித்த ஆட்சேபங்களை முறையாக பரிசீலித்து பதிலளித்திருந்தால் இந்த வழக்குகள் நீதிமன்றம் வந்திருக்காது. ஆட்சேபங்கள் கோரி முறையாக அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. 2022-23ம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தக் கூறி மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் ரத்து செய்யப்படுகிறது. 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல், அதாவது வரும் ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த வேண்டும். சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjYxNTTSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjE1NC9hbXA?oc=5