சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் 23 அணி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து அவர் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி வருகின்றன. குறிப்பாக தமிழகத்திலும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளன. அதில், மாவட்டம் மற்றும் பூத் வாரியாக கட்சியை பலப்படுத்துவது குறித்தும், இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் சமூக வலைதளங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்தும் அந்தந்த கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைப்பது குறித்து திமுகவும் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது.  அதன்படி, திமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் பொதுக்குழுவும் அண்மையில் கூட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 1ம்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி வளர்ச்சி குறித்தும் 2024ம்  ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்தும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துக் கூறினார்.

அதற்கேற்ப கட்சியில் ஒவ்வொரு வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திமுகவில் உள்ள ஒவ்வொரு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மாணவரணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, இலக்கிய அணி, தொண்டரணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உள்ளிட்ட 21 அணிகளுக்கு மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

அதேபோன்று, விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி என்று மேலும் 2 அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஒட்டு மொத்தமாக 23 அணிகளின் நிர்வாகிகளும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று திமுகவில் உள்ள 23 அணிகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் தேர்தல்  பணிக்குழு உள்ளிட்ட 6 குழுக்களின் உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம்  நடத்தினார்.

அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளருமான தயாநிதி மாறன் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் 416 பேர் இதில் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும், திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டமும் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் எவ்வாறு தயாராவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொள்வது குறித்தும், அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். அப்போது, அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் மத்தியில் நாடாளுமன்ற தேர்தலை திமுகவினர் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தில், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி பேசியதாக தகவல் வெளியானது. அதில், மாவட்ட அளவில் திமுக அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி விரைந்து முடிக்க வேண்டும். 23 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க துணைப் பொதுச்செயலாளர்களான ஐ.பெரியசாமி, பொன்முடி, கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.  திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில் அணிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற உங்களது பணி அடித்தளமாக அமையும். அதிமுக, பாஜ கட்சியினரின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் நமது பிரசாரம் அமைய வேண்டும்.

அதிமுக எந்த வகையில் கூட்டணி அமைத்தாலும் மக்களிடம் அது எடுபடாது. அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் நமது ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க நீங்கள் பாடுபட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே நீங்கள் தயாராக வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக பாஜ கட்சி எதையும் செய்ய தயங்காது. பாஜ கட்சியை எதிர்கொள்ள திமுகவினர்  அனைவரும் தயாராக வேண்டும். இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வந்ததை போல் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெற நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். அதற்கேற்ப உங்கள் செயல்பாடு அமைய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசியதாக கூறப்படுகிறது.

* நாட்டை காக்க ஆயத்தமாக வேண்டும்
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து, திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகளுடன், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சமத்துவம்- சமூகநீதி-பகுத்தறிவு வாயிலாக முற்போக்கான சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது கடமையை நிறைவேற்றிட, சாதி- மத ஏற்றத்தாழ்வுகளை வலிமைப்படுத்தி ஆதிக்கத்தை நிறுவத் துடிக்கும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjYzNzHSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjM3MS9hbXA?oc=5