தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: ஆங்கில புத்தாண்டின்போது, பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் குதூகல கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் புத்தாண்டு பாதுகாப்புக்கு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் 31ம் தேதி அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு கீழ்க்காணும் அறிவுரைகள் கடைபிடிக்க காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

* 31ம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.
* 31ம் தேதி மாலை முதல் சுமார் 90 ஆயிரம் காவல்துறையினர், 10 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், வாகன சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு மோட்டர் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
* நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
* கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது.
* மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர். வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
* அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள், 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர வேண்டும். அதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலை கடைகள் திறந்திருக்கும்.
* வழிபாட்டு தலங்களுக்கு காவல்
துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.
* வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து எற்பாடு செய்யப்படும்.
* கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
* கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் பற்றி தகவலை காவல்துறைக்கு 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தரும் பொதுமக்களின் ரகசியம் காக்கப்படும்.
* அவசர உதவி தேவைப்படுபவர்கள் ‘காவல் உதவி’ என்ற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அதற்கு ‘காவல் உதவி’ செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjYzNzLSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjM3Mi9hbXA?oc=5