சென்னையில் வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் 10வது உலக தமிழர் தொழிலதிபர்கள் மாநாடு: தி … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி ஆகிய தேதிகளில் தி ரைஸ் அமைப்பின் சார்பில் 21 நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்கும் 10வது உலக தமிழர் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெறும் என்று தி ரைஸ் எழுமின் அமைப்பின் நிறுவன தலைவர் ஜெகத் கஸ்பர் கூறினார்.

சென்னையில் தி ரைஸ் எழுமின் அமைப்பின் நிறுவன தலைவர் ஜெகத் கஸ்பர் நிருபர்களிடம் கூறியதாவது: உலக தமிழ் தொழில் அதிபர்களை ஒருங்கிணைத்து பல நாடுகளில் மாநாடுகளை நடத்தி வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் 9 உலக மாநாடுகளை தி ரைஸ் அமைப்பு நடத்தியுள்ளது. அந்த வகையில் வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி ஆகிய நாட்களில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழ் தொழிலதிபர்கள் பங்கேற்கும் 10வது உலக தமிழர் தொழிலதிபர்கள் மாநாடு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் உலக அளவில் பல்வேறு தொழில்களில் வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்கிறார்கள். இதில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பு மிக்க பரிவர்த்தனைகள் நடைபெற உள்ளது. அனைத்துலக தமிழ் பெண்கள் தொழில் முனைவோர் அமைப்பு மாநாட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். மேலும் வரும் ஜனவரி 8, 9, 10ம் தேதி ஆகிய  3 நாட்கள் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழர் பாரம்பரியம் சார்ந்த  பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதில் 8ம் தேதி 500 பொங்கல் பானைகள் கொண்டு அனைத்துலக தமிழர் ஒற்றுமை பொங்கல் விழா நடைபெறும். ஜல்லிக்கட்டு காளைகள் காட்சி படுத்தப்பட உள்ளது. இயற்கை வேளாண் சார்ந்த பொருட்களை  வாங்க ஊக்குவிக்கும் வகையில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு பொங்கல் வைக்கப்படும்.

மேலும் தமிழர் உணவுத் திருவிழா, கலைப் பண்பாட்டு நிகழ்வு, தமிழர் பொங்கல் விழா தமிழர் சங்கமத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொள்கின்றனர்.

கூட்டு மூலதனம் என்ற கருத்தியலை வலுப்படுத்தி தொழில் முனைவோருக்கு அதன் மூலமாக திறனை மேம்படுத்துவதற்காக வாய்ப்புகளை கலந்துரையாடி மேம்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கமாக இருக்கும். தைப் பொங்கலை வரும் ஆண்டுகளில் தமிழரின் பெருமையை போற்றும் வகையில் உலக அளவில் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளோம். சிலம்பம், களரி அடிமுறைகளை மீட்டெடுத்தலை மையமாகக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjc3NTDSAQA?oc=5