சென்னையில் கூடுதலாக 20 பேருந்து சேவை… எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது ஊரறிந்த விஷயம். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணிப்பது ஆபத்தான ஒன்றாக பார்க்க முடிகிறது. இது அவ்வப்போது உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. இதை சமாளிக்க உரிய திட்டமிடல்கள் அவசியம். இந்நிலையில் CUMTA எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் மீண்டும் புத்துயிர் பெற்றது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

CUMTA நடத்திய ஆலோசனை

ஏனெனில் சென்னையின் போக்குவரத்து அம்சங்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல CUMTA மூலம் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள போதிய போக்குவரத்து வசதிகளை செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டது.
சென்னை புத்தகக் கண்காட்சி 2023: எத்தனை நாட்கள்? என்னென்ன சிறப்புகள்? முழு விவரம்!
மொத்தம் 12 வழித்தடங்கள்

அதன்படி, மிகவும் நெருக்கடியாக காணப்படும் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பேருந்து சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை கூடுதலாக மாணவர்கள் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக காலை 8 மணி முதல் 9.30 மணி வரை பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பயணிப்பர்.

அதிகாரிகள் செயல் திட்டம்

இந்த நேரத்தில் தான் மேற்குறிப்பிட்ட கூடுதல் பேருந்து சேவையை அமல்படுத்தியுள்ளனர். இதற்காக களப்பணியில் இறங்கிய அதிகாரிகள் எந்தெந்த வழித்தடங்களில் தேவை அதிகமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயார் செய்தனர். அவற்றின் அடிப்படையில் கூடுதல் பேருந்து சேவை தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

கூடுதல் சேவைகள்

  • 29A – பெரம்பூர் டூ எழும்பூர்
  • M88 – போரூர் டூ குன்றத்தூர்
  • M88 – போரூர் டூ வடபழனி
  • 54R – ராமாபுரம் டூ குமணஞ்சாவடி
  • 54R – ராமாபுரம் டூ டைடல் பார்க்
  • 153 – சி.எம்.பி.டி டூ குமணஞ்சாவடி
  • 147 – தி.நகர் டூ அம்பத்தூர் தொழிற்பேட்டை
  • 56A – எண்ணூர் டூ வள்ளலார் நகர்
  • 38A – மாதவரம் டூ பிராட்வே
  • 5G – கண்ணகி நகர் டூ வேளச்சேரி
  • 21G – கிண்டி டூ பிராட்வே
  • 21X – கிண்டி டூ பிராட்வே (வழி மந்தைவெளி)

சென்னை டிராபிக்: நெரிசலுக்கு வருகிறது புதிய தீர்வு… 300 இடங்களில் மெகா திட்டம்!
ஒழுங்குபடுத்தும் பணிகள்

இதுதொடர்பாக பேசிய மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள், கூடுதல் பேருந்து வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு செல்வது பெரிதும் குறைந்துள்ளது. பேருந்துகளில் மாணவர்கள் ஏறும் போது பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஒழுங்குபடுத்த போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ச்சியாக ஒழுங்குபடுத்தி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMinAFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL2NoZW5uYWktbmV3cy9tdGMtYmVnaW5zLXRvLW9wZXJhdGUtZXh0cmEtYnVzZXMtaW4tMTItcm91dGVzLW9mLWNoZW5uYWktZHVlLXRvLXNjaG9vbC1zdHVkZW50cy9hcnRpY2xlc2hvdy85Njc1Njk3OS5jbXPSAaABaHR0cHM6Ly90YW1pbC5zYW1heWFtLmNvbS9sYXRlc3QtbmV3cy9jaGVubmFpLW5ld3MvbXRjLWJlZ2lucy10by1vcGVyYXRlLWV4dHJhLWJ1c2VzLWluLTEyLXJvdXRlcy1vZi1jaGVubmFpLWR1ZS10by1zY2hvb2wtc3R1ZGVudHMvYW1wX2FydGljbGVzaG93Lzk2NzU2OTc5LmNtcw?oc=5