சென்னை மாரத்தான் ஓட்டம் காரணமாக நேப்பியர் பாலம்- பெசன்ட் நகர் வரை நாளை காலை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாரத்தான் ஓட்டம் காரணமாக நாளை அதிகாலை 4 மணி முதல் நிகழ்ச்சி முடிவு வரை நேப்பியர் பாலம் முதல் பெசன்ட் நகர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ெசன்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42 கி.மீ, 32 கி.மீ, 21 கி.மீ மற்றும் 10 கி.மீ) சென்னை மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு,  நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை,  டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர் வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்றடையும். இதனால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

* அடையாறு மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.
* போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மர சாலை வழியாக திருப்பி விடப்பட்டு – வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
* ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அந்த வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
* மத்திய கைலாஷ் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது, அந்த வாகனங்கள் எல்பி சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
* காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வாகனங்கள் எல்பி சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
* பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஆல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
* மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்எல் பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.   
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம்
மாரத்தான் ஓட்டம் நேப்பியர் பாலம் அருகே துவங்கி திருவிக பாலம், அடையாறு மத்திய கைலாஷ், டைடல் பார்க், துரைப்பாக்கம் வழியாக தாம்பரம் மாநகர காவல் எல்லையான மேட்டுக்குப்பம் ராஜிவ் நகர் சந்திப்பு வந்தடைந்து, அங்கிருந்து சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலை அக்கரை, பனையூர் வழியாக முட்டுக்காடு பொழுதுபோக்கு மையம் வந்தடைந்து, வலது புறம் திரும்பி இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகே முடிவடைகிறது.

இதனால், நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அறிவித்துள்ளார். அதாவது, சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து, சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் செம்மொழி சாலையாக செல்ல வேண்டும். அதேபோல், மேட்டுக்குப்பம் ராஜ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜிவ்காந்தி சாலையில் வலது புறமாக செல்ல வேண்டும். மேலும், மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும், வேளச்சேரி பிரதான சாலை பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjg5NDjSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyODk0OC9hbXA?oc=5