மகனின் கடனை அடைக்க முடியாததால் வேதனை; சென்னை என்ஜினீயர் மனைவியுடன் தற்கொலை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

என்ஜினீயர்

குமரி மாவட்டம் தக்கலை மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகத்தை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் (வயது 63). இவர் சென்னை துறைமுகத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பிரேமலதா (58). இவர்களுக்கு ஆதவன் (32), மாலன் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

மகன்கள் இருவரும் திருமணம் முடிந்து சென்னையில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இதனால் ஆறுமுக பெருமாளும், பிரேமலதாவும் மணவாளக்குறிச்சியில் தனியாக வசித்து வந்தனர்.இந்த நிலையில் மூத்த மகன் ஆதவன் சென்னையில் தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அந்த நிறுவனம் பெரும் நஷ்டமடைய தொடங்கியது.

தந்தையிடம் உதவி கேட்ட மகன்

இதனால் அவருக்கு லட்சக்கணக்கில் கடன் ஏற்பட்டது. கடனை அடைக்க ஆதவன் மணவாளக்குறிச்சியில் உள்ள தனது தந்தையிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தந்தை ஆறுமுகபெருமாள் குடும்ப சொத்தை விற்று ஆதவனுக்கு பணம் தருவதாக கூறினார். அதன்படி சொத்தை விற்க விலை பேசப்பட்டு முன்பணமும் வாங்கினார். ஆனால் குறித்த நேரத்தில் பத்திரப்பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது.இதனால், ‘தக்க சமயத்தில் மகனின் கடனை அடைக்க பணம் கொடுத்து உதவ முடியவில்லையே’ என ஆறுமுகபெருமாளும், அவரது மனைவி பிரேமலதாவும் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் மகன் ஆதவன் பெற்றோரிடம் பேசுவதற்கு சென்னையில் இருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆறுமுகபெருமாள் செல்போனை எடுத்து பேசவில்லை. இதையடுத்து ஆதவன் அருகில் உள்ள உறவினர்களை தொடர்பு கொண்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

பிணமாக கிடந்தனர்

உடனே உறவினர்கள் ஆறுமுகபெருமாளின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் உறவினர்கள் வெளியே நின்று அழைத்தனர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.இதையடுத்து பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது.

ஆறுமுகபெருமாள் சோபாவிலும், அவரது மனைவி பிரேமலதா தரையிலும் வாயில் நுரை வந்த நிலையில் பிணமாக கிடந்தனர். அருகில் பழம், பழத்தோல் மற்றும் மிக்சர் பொட்டலம் போன்றவை இருந்தது.மகனின் கடனை அடைக்க உதவ முடியாததால் இருவரும் பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்ததாக தெரிகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தாயும், தந்தையும் இறந்த தகவல் சென்னையில் உள்ள மகன்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMijQFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvYW5ndWlzaC1mb3Itbm90LWJlaW5nLWFibGUtdG8tcGF5LWhpcy1zb25zLWRlYnQtY2hlbm5haS1lbmdpbmVlci1jb21taXRzLXN1aWNpZGUtd2l0aC1oaXMtd2lmZS04NzUyNjHSAZEBaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9hbmd1aXNoLWZvci1ub3QtYmVpbmctYWJsZS10by1wYXktaGlzLXNvbnMtZGVidC1jaGVubmFpLWVuZ2luZWVyLWNvbW1pdHMtc3VpY2lkZS13aXRoLWhpcy13aWZlLTg3NTI2MQ?oc=5