ராமஜெயம் கொலை வழக்கு: 13 பேருக்கு சென்னையில் இன்று உண்மை கண்டறியும் சோதனை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

திருச்சி

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமஜெயம் கொலை சம்பவம் நடந்தபோது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன் உள்பட 13 பேர் இருந்தனர். இந்த பட்டியலில் உள்ளவர்களிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அனுமதித்தார்.

இந்தநிலையில் 13 பேரிடமும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை சென்னையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் அரசு நிபுணர்களின் முன்னிலையில் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்தப்போவதாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 13 பேருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும். பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும், என்றனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMieWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9yYW1hamF5YW0tbXVyZGVyLWNhc2UtMTMtcGVvcGxlLXRvLWZhY2UtZmFjdC1maW5kaW5nLXRlc3QtaW4tY2hlbm5haS10b2RheS04ODAwMDPSAX1odHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9OZXdzL1N0YXRlL3JhbWFqYXlhbS1tdXJkZXItY2FzZS0xMy1wZW9wbGUtdG8tZmFjZS1mYWN0LWZpbmRpbmctdGVzdC1pbi1jaGVubmFpLXRvZGF5LTg4MDAwMw?oc=5