குடியரசு தினவிழா பாதுகாப்பு- சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

ஆலந்தூர்:

இந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக, உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனா். அதைப்போல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா்.

விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதைப்போல் விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கான பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அப்பகுதியில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் தற்போது கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இதைப்போல் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை, விமானங்களில் ஏறும் இடத்தில் பயணிகளுக்கு, பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை சோதிக்கின்றனா். பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப் பின்னரே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளை அறிவுறுத்தி உள்ளனா்.

சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 30-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு, வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான, 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiY2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3JlcHVibGljLWRheS1zZWN1cml0eS12aXNpdG9ycy1iYW4tYXQtY2hlbm5haS1haXJwb3J0LTU2MjYyNNIBZ2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS9yZXB1YmxpYy1kYXktc2VjdXJpdHktdmlzaXRvcnMtYmFuLWF0LWNoZW5uYWktYWlycG9ydC01NjI2MjQ?oc=5