சென்னையில் ஒரு வார சோதனை பெண் கஞ்சா வியாபாரி உள்பட 9 பேர் கைது – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த ஒரு வாரத்தில் பெண் கஞ்சா வியாபாரி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையை போதை இல்லாத மாநகரமாக மாற்றும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னையில் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக ஆந்திரா மற்றும் திரிபுரா மாநிலங்களில் இருந்து ரயில்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததாக சென்னை மாநகர காவல் எல்லையில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கஞ்சா வியாபாரிகள் உட்பட 9 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3.4 கிலோ கஞ்சா, 4 கிராம் மெத்தபெட்டமைன், 8 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெளிநாட்டு போதை பொருட்களான மெத்தபெட்டமைன் போதை பொருள் ரகசியமாக விற்பனை செய்து வந்த திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த முகமது நவுபிக் (21), மந்தைவெளி ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த சஞ்சய்சாய் (20), மணப்பாக்கத்தை சேர்ந்த சல்மான் சகிர் (20), மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த முகமது சியாத் (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், பழையவண்ணாரப்பேட்டை வரதராஜபெருமாள் கோயில் தெருவில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்த கஞ்சா பெண் வியாபாரி நீலாவதி (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzIwNTbSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzMjA1Ni9hbXA?oc=5