கடலூர் – சென்னை கடற்கரையோர ரயில் திட்டம் புத்துயிர் பெறுமா? – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கடலுாரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு கடற்கரையோர ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என, ரயில் பயணிகள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடலுார், புதுச்சேரி மக்களின் நீண்ட ஆண்டு கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலுார் வரை, ரயில் பாதை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்து, கடந்த 2007ம் ஒப்புதல் அளித்தது. 179.2 கி.மீ., துாரத்திற்கு, ரயில் பாதை அமைக்க, 2008ல், திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. 2010–2011ம் ஆண்டு ஆரம்பக் கட்ட சர்வே நடத்தப்பட்டது.

இதற்கான ஆய்வுப் பணியை, தெற்கு ரயில்வே கட்டுமானத் துறை மேற்கொண்டது. அப்போது, செங்கல்பட்டில் இருந்து சோழிங்கநல்லுார், மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலுாருக்கு ரயில் பாதை அமைக்கலாம் என, ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர்.

அதையடுத்து, மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம், ஜிப்மர், வேல்ராம்பட்டு ஏரிக்கரை, பாகூர் வழியாக கடலுாருக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது.

சென்னை – புதுச்சேரி இடையே சர்வே பணி 80 சதவீதவீம் முடிந்தது. பின், புதுச்சேரி–கடலுார் வரையிலான 22 கி.மீ., துார ரயில் பாதைக்கு சர்வே செய்யப்பட்டது. ஆனால், ரயில் பாதை குறுக்கிடும் இடங்களை மறு ஆய்வு செய்ய, ரயில்வே துறைக்கு புதுச்சேரி மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதனையும் ஏற்று ரயில்வே நிர்வாகம் சர்வே பணியை முடித்த நிலையில், பணிகள் கடந்த 2018 மீண்டும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இதன் காரணமாக, கடலுாரில் இருந்து புதுச்சேரி வழியாக ரயில் பாதை அமைக்கும் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாகியது.

இதனால், கடலுாரில் இருந்து புதுச்சேரி வருபவர்களின் அவதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலுார் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகிறது.

எனவே, கடலுார் — சென்னை ரயில் பாதை திட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு, தமிழக, புதுச்சேரி அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லோக்சபாவில் கடலுார், புதுச்சேரி எம்.பி.,க்கள் வலியுறுத்த வேண்டும் என்றும், கடலுார் மாவட்ட மக்கள் பெரிதும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் பட்ஜெட்டில், புதுச்சேரி – கடலுார் இடையே ரயில் போக்குவரத்து திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, திட்ட வரைவுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது எனவும், இறுதிநிலை சர்வே மேற்கொள்ள தெற்கு ரயில்வே ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளதாகவும் கவர்னர் தமிழிசை அறிவித்தார்.

இதனால், கடலுார்- சென்னை ரயில்பாதை திட்டம் மீண்டும் வரலாம் என, மக்களுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது.

இந்நிலையில், வரும் பிப்., 1ம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என, தெரிவிக்கின்றனர்.

இதனால், கிடப்பில் போடப்பட்ட பழைய திட்டமான புதுச்சேரி வழியாக கடலுார் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற அறிவிப்பு வெளியாகலாம் என, மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுச்சேரி வழியாக கடலுாருக்கு ரயில் பாதை அமைத்தால், ரயில் பயண நேரம் குறைவதுடன், கடலுாரில் இருந்து விழுப்புரம் வழியாக 100 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் பயண துாரம் குறையும். கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து குறையும், வாகன நெரிசலும் தவிர்க்கப்படும். கடலுார் மற்றும் புதுச்சேரியில் இருந்து தினசரி சென்னைக்கு சென்று வருபவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

– நமது நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

image

Dinamalar iPaper


ஜன.25: இன்று 249வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

முந்தய


பால் கொள்முதல் விலை உயர்வு: 4 ஆண்டுக்கு பின் லிட்டருக்கு ரூ.5 அதிகம்

அடுத்து








வாசகர் கருத்து



Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMjU4ODDSAQA?oc=5