சோழிங்கநல்லூரில் கிளினிக்கில் புகுந்து மருத்துவர் முகத்தில் பெப்பர்தூள் அடித்து மருத்துவரை அறையில் அடைத்து வைத்து பணம் பறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூர் காந்தி நகரில் சதீஷ்குமார் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக நலம் கேர் கிளினிக் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் (28.01.2023) இரவு சுமார் பத்து மணியளவில் கிளினிக் மூடுவதற்கு முன்பாக மருத்துவம் பார்ப்பதுபோல் உள்ளே வந்த இரண்டு நபர்கள் மருத்துவர் சதீஷ்குமார் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து அங்கிருந்த கத்திரிக்கோலை கழுத்தில் வைத்து மிரட்டி கிளினிக்கை சாத்திவிட்டு உள்ளே அடைத்து வைத்துக்கொண்டு மருத்துவரிடமிருந்து ரூ. 20 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
பின்னர் மருத்துவரின் செல்போன், மருத்துவரின் காரை திருடி செல்வதற்காக காரின் சாவி ஆகியவற்றை எடுத்துக் கொண்ட இருவரின் அனைத்து செயல்களும் அங்கு பாதுகாப்பிற்காக பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி கொண்டிருந்ததை பார்த்த அந்த நபர்கள் அவர்கள் குறித்து எந்த தடயங்களும் காவல்துறைக்கு சிக்கிவிடக்கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராவையும் உடைத்து மெமரி கார்டை எடுத்து சென்றுள்ளனர்.
பின்னர் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தபோது மருத்துவர் கூச்சலிட்டதால் பொதுமக்கள் கூடி இருவரையும் துரத்தினர். வெற்றிச்செல்வன் என்ற நபர் தப்பி ஓடிட, பிரகாஷ் என்ற நபர் தப்பி ஓஎம்ஆர் சாலை வழியாக ஓட முயன்றபோது சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதி கீழே விழுந்துள்ளார்.வாகனம் மோதி கீழே விழுந்து காயங்களுடன் இருந்த பிரகாஷை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடித்தனர். அப்போது மருத்துவர் சதீஷ்குமாரிடம் கத்திரிக்கோல் முனையில் கொள்ளையடித்த ரூ. 20 ஆயிரத்தை மீட்டுள்ளனர்.
பின்னர் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த செம்மஞ்சேரி உதவி ஆய்வாளர் ராகவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் சிறை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து பிரகாஷ் என்பவரை பொதுமக்களிடம் இருந்து மீட்ட போலீசார் முதற்கட்டமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி சிகிச்சை அளித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட மருத்துவர் சதீஷ்குமார் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் நடராஜானிடம் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்தனர்.
அதை தொடர்ந்து செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் ரியாசுத்தீன் மேற்பார்வையில் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் ராகவன் உள்ளிட்ட காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்தனர். மருத்துவமனையில் இருந்து செம்மஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்த பின்பு பிரகாஷிடம் நடத்திய விசாரணையில் சென்னை நீலாங்கரை பகுதியை வசித்து வரும் காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவர் உடன் சேர்ந்து மருத்துவரிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் கூறியுள்ளார்.
பின்னர் நீலாங்கரை சென்ற தனிப்படையினர் அங்கிருந்த வெற்றிச்செல்வன், சத்தியசீலன், பிரதாப் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்ததில் வீட்டில் ஒரு துப்பாக்கி வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். பின்னர் மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் புகார் கொடுத்த மருத்துவர் சதிஷ்குமார் மற்றும் கைதான சிதம்பரத்தை சேர்ந்த சத்தியசீலன் இருவரும் சுமார் 10 வருட நண்பர்கள் என்பதும் இருவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மனகசப்பு ஏற்பட்டு பிரிந்து சென்றது தெரியவந்துள்ளது.
மருத்துவர் சதிஷ்குமாருடன் நெருங்கி பழகிய சத்தியசீலன் சதிஷ்குமாரிடம் அதிக பணம் இருப்பதால் அவரிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ், பிரகாஷின் தம்பி பிரதாப், வெற்றிச்செல்வன் ஆகிய மூன்று பேருடன் இணைந்து கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை உதவியாளர் ஒருவர் இவர்களைப் பிடிக்க வந்தபோது இந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பி சென்றதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கியை வைத்து பல கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் கைதான 4 பேர் மீதும் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்திரிக்கோல், பெப்பர் ஸ்ப்ரே, கொள்ளையடித்த கார் சாவி, சிசிடிவி கேமரா மற்றும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்: வினோத் கண்ணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvc2hvbGluZ2FuYWxsdXItZG9jdG9yLWNsaW5pYy1yb2JlcnJ5LWFjY3VzZWQtcmVtYW5kLTg4MTY4OS5odG1s0gFpaHR0cHM6Ly90YW1pbC5uZXdzMTguY29tL2FtcC9uZXdzL2NoZW5uYWkvc2hvbGluZ2FuYWxsdXItZG9jdG9yLWNsaW5pYy1yb2JlcnJ5LWFjY3VzZWQtcmVtYW5kLTg4MTY4OS5odG1s?oc=5