சென்னை: திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்; சிறைக்குச் சென்ற இளைஞர் – என்ன நடந்தது? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (38) (பெயர் மாற்றம்). இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கவிதாவுக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது யுவராஜ், கவிதாவை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதையடுத்து, இருவரும் நெருங்கிப் பழகி வந்திருக்கின்றனர்.

இந்தச் சூழலில் யுவராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவிதா கூறியிருக்கிறார். அதற்கு யுவராஜ், திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது கவிதாவை யுவராஜ் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து கவிதா, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் யுவராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து, யுவராஜைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “கவிதா அளித்த புகாரின் அடிப்படையில் யுவராஜிடம் விசாரித்தோம். அப்போது யுவராஜூம் கவிதாவும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வசித்தது தெரியவந்தது. தற்போது கவிதாவை திருமணம் செய்துகொள்ள யுவராஜ் விரும்பவில்லை. அதனால்தான் யுவராஜைக் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiamh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvcG9saWNlLWFycmVzdGVkLWEteW91bmdzdGVyLXdoby1yZWZ1c2VzLXRvLW1hcnJ5LWEtZ2lybC1hbmQtY2hlYXRlZC1oZXLSAXRodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9wb2xpY2UtYXJyZXN0ZWQtYS15b3VuZ3N0ZXItd2hvLXJlZnVzZXMtdG8tbWFycnktYS1naXJsLWFuZC1jaGVhdGVkLWhlcg?oc=5