மார்ச் 22-ல் மக்கள் ஊரடங்கு.. சாலைவாசிகளுக்கான ஏற்பாடுகள்- சென்னை மாநகராட்சிக்கு ஹைகோர்ட் உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 22-ந் தேதி ஊரடங்கை முன்னிட்டு, சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு சமூக நலக் கூடங்களில் தங்க அனுமதித்து, உணவும் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தவிர்க்கும் வகையில் வரும் 22ம் தேதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் எனவும், அன்றைய தினம் ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் சென்னையில் வீடில்லாமல் 9 ஆயிரம் பேர் வரை சாலையோரம் வசித்து வருவதால் ஊரடங்கு அன்று அவர்களை மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் தங்க அனுமதித்து, உணவு வழங்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா பெஞ்ச் முன்பாக முறையிட்டார்.

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், ஊரடங்கு தினத்தன்று, சாலையோரம் வசிக்கும் வீடில்லாத மக்கள், மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்படுவர் என தெரிவித்தார்.

இதை அடுத்து, அவர்களுக்கு உணவும் வழங்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தனியார் திருமண மண்டபங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirsu-hc-issues-order-to-chennai-corporation-on-janata-curfew-380307.html