கடந்த 7 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

கடந்த 7 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை, 

சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் 1,100 முதல் 1,200 என்ற எண்ணிக்கையில் இருந்து வருகிறது. இந்த பாதிப்பை மேலும் குறைப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி காய்ச்சல் முகாம்கள், களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறிதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில் சென்னையில் கடந்த 7 நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா பாதிப்பு 1.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் கடந்த 7 நாட்களில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் 2 மண்டலங்களில் பாதிப்பு குறைந்துள்ளது. திரு.வி.க நகர் மண்டலத்தில் 10.1 சதவீதமும், தண்டையார்பேட்டையில் 7 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 5.2 சதவீதமும், வளசரவாக்கம் மண்டலத்தில் 4.8 சதவீதமும், பெருங்குடியில் 3 சதவீதமும், ஆலந்தூரில் 2.9 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இதேபோல், அண்ணாநகரில் 2.7 சதவீதமும், தேனாம்பேட்டையில் 2.2 சதவீதமும், அடையாறில் 1.7 சதவீதமும், மணலியில் 1.5 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 1.4 சதவீதமும், திருவொற்றியூரில் 1.3 சதவீதமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் மாதவரம் மண்டலத்தில் 2.8 சதவீதமும், அம்பத்தூர் மண்டலத்தில் 4.9 சதவீதமும் பாதிப்பு குறைந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் புதிதாக எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/08/24064652/Increase-in-corona-exposure-in-Chennai-in-last-7-days.vpf