சென்னை: சென்னை பி.எஸ்.பி.பி.(PSBB) பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக லோக்சபா எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது மாணவிகள் பலரும் சமூக வலைதளங்களில் பகிரங்க பாலியல் தொல்லை புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புகார்கள் அளித்தும் கூட பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் மாணவிகள் குற்றச்சாட்டு.
சென்னை பிஎஸ்பிபி பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர், நிர்வாகம் மீது நடவடிக்கை தேவை-கனிமொழி
கனிமொழி வலியுறுத்தல்
சமூக வலைதளங்களில் வெளியான இந்த குற்றச்சாட்டை முன்வைத்து திமுக எம்.பி. கனிமொழி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். அதில் புகார் கூறப்பட்ட ஆசிரியர் மீது, கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
தமிழச்சி ட்வீட்
இதனைத் தொடர்ந்து மற்றொரு திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் தமது ட்விட்டர் பக்கத்தில், சென்னை கே.கே.நகர் பி.எஸ்.பி.பி. பள்ளியில் ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லை தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அந்த ஆசிரியர் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை பள்ளி நிர்வாகம் பாதுகாக்க முயற்சித்தால் மத்திய மாநில கல்வித்துறைகள் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தயாநிதி மாறன் கண்டனம்
மேலும் திமுகவின் லோக்சபா எம்.பி.யான தயாநிதி மாறனும் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தயாநிதி மாறன், சென்னை பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு பெற்றோராக வலியுறுத்துகிறேன் என்றார்.
ராமதாஸ் கோரிக்கை
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தவ்ஹீத் ஜமாஅத் ஷிப்லி
இதேபோல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது: சென்னை PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் ஆபாசமாக நடந்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.இது போன்ற புகார்களை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. குற்றம் புரிந்த ஆசிரியர் மீதும்,பள்ளி நிர்வாகிகள் மீதும் உடனடியாக கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்..
Source: https://tamil.oneindia.com/news/chennai/thamizhachi-thangapandian-also-demands-take-action-against-chennai-pssb-teacher-421851.html