சென்னை: சென்னை பெருங்களத்தூர் அருகே கோர விபத்தில் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். அதிவேகமாக காரை ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த முடித்த மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ளனர்.
இடி மின்னலுடன் 9 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை அடி வெளுக்கும் – நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
பின்னர் நண்பர்களுடன் திநகரில் பொருட்களை வாங்கிவிட்டு இரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இவர்கள் காரைப்பேட்டை பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். உடன் இருந்த நண்பர்களிடம் வண்டலூர் வரை ஒரு ரவுண்ட் சென்று வருவதாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். சொகுசு காரை மேட்டுரை சேர்ந்த நவீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
தனியார் ஐடி நிறுவனம்
அப்போது பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே அடைாளம் தெரியாத வாகனம் நவீன் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறிய கார், அங்கு இரும்பு கம்பிகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த டிரைலர் லாரி மீது மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கி சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது.
5 பேர் உடல்கள்
இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான 5 பேரின் உடல்களையும் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் அந்த உடல்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை நேர்காணல்
இந்த 5 பேரும் நாளை நடைபெறவிருந்த ஒரு நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்கயிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. வார இறுதி நாட்களில் கிழக்கு கடற்கரை சாலை, முக்கிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டி செல்லும் இளைஞர்கள் அதிவேகமாக செல்கிறார்கள். மேலும் சிலர் மதுபோதையிலும் வாகனத்தை ஓட்டுகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸார் இரவு நேர ரோந்துகளில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மகாபலிபுரம் சம்பவம்
கடந்த மாதம் மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் இரவு பார்ட்டியை முடித்துவிட்டு நடிகை யாஷிகா ஆனந்த், அவருடைய தோழி வள்ளிச்செட்டி பவனி, இரு ஆண் நண்பர்கள் ஒரு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் பவனி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/5-died-in-car-lorry-crash-near-perungalathur-chennai-432041.html