சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பொது இடங்களில் உள்ள கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்றச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கொரோனா பரவல் காரணமாகப் பரப்புரைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலைில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தெறி! நகர்ப்புறத்திலும் ஒரு கை பார்க்கும்
தேர்தல் தேதிகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை, அதாவது ஜனவரி 28 முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் பிப்ரவரி 5ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரு கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22இல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
முக்கிய உத்தரவு
தேர்தல் நடவடிக்கைகள் பிப்ரவரி 24இல் முடிவுக்கு வரும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதி இப்போது அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கத் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அது தொடர்பாக வீடியோ எடுத்து உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விளம்பரங்கள்
மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள பொது இடங்களில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக தொடங்கவும் அனைத்து வார்டு உதவி மற்றும் இளநிலை பொறியாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
45 பறக்கும் படைகள்
அதன் அடிப்படையில் பொது இடங்களில் உள்ள கட்சி போஸ்டர்கள், ஓவியங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்கும் பணிகள் மாநகராட்சி ஊழியர்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் சில நாட்களில் முழுவதுமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-removes-party-related-poster-in-chennai-446747.html