Chennai, First Published Mar 4, 2022, 12:10 PM IST
உக்ரைனில் இருந்து டெல்லி வழியாக 7 விமானங்களில் 132 பேர் சென்னை வந்தனர். விமானங்களில் வட மாநிலத்தினருக்கே முக்கியத்துவம் தரப்படுவதாக அம்மாணவர்கள் குற்றச்சாட்டினர். உக்ரைனில் போர் நடப்பதால் கடந்த சில தினங்களாக இந்தியா அரசு சிறப்பு விமானங்கள் இயக்கி இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வந்தன.
தமிழகத்திற்கு இதுவரை 143 மாணவர்கள் வந்தனர். இந்த நிலையில் 5வது நாளாக 7 விமானங்களில் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை, உள்பட பல பகுதிகளை சேர்ந்த 132 மாணவ- மாணவிகள் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். சென்னை வந்தவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னைக்கு வந்த 10 பேர் கோவைக்கு, 8 பேர் திருச்சிக்கும் 6 பேர் திருவனந்தபுரத்திற்கும் விமானம் முலம் தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசின் அயலக நலத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் கூறுகையில், இதுவரை 393 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வந்து உள்ளனர். 15 விமானங்கள் இந்தியர்களை அழைத்து கொண்டு வருகிறது. இதில் அதிகமான மாணவர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். கார்கிவ் பகுதியில் இருந்து மாணவர்கள் வெளியே வர தொடங்கி உள்ளனர்.
சுமி பகுதியில் தான் மாணவர்கள் உள்ளனர். இந்திய வெளியுறவு துறையினரிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம். சுமியில் 68 தமிழக மாணவர்கள் உள்ளனர். கார்கிவ் நகரில் இருந்து சிலர் வந்து உள்ளனர். முழுமையாக மாணவர்கள் வரவில்லை. கார்கிவ்வில் இருந்து வெளியேறியவர்கள் எல்லை கடக்க வந்து கொண்டு உள்ளனர்.50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை, திருச்சிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி செல்ல கூடிய மாணவர்கள் திருவனந்தபுரம் வழியாக அனுப்பப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி, ஒசூர் செல்ல கூடியவர்களுக்கு பெங்களூருக்கு விமான டிக்கெட் போடப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு செல்ல வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது என்றார். புதுக்கோட்டையை சேர்ந்த சீத்தாராமன் கூறுகையில், உக்ரைன் கிழக்கு பகுதியில் இறுதியாண்டு படித்து வந்தேன். போர் தொடங்கும் முன் மேற்கு பகுதிக்கு வந்து விட்டேன். மேற்கு பகுதியில் பாதிப்பு இல்லை. ஆனால் நாங்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த விமான நிலையத்தை தாக்கிவிட்டனர்.
மத்திய அரசு இதுவரை மேற்கு பகுதியில் உள்ள மாணவர்களை மீட்டு வந்துள்ளது. ஆனால் போர் பகுதியில் உள்ள இந்திய மாணவர்கள் வர முடியாத நிலை. உக்ரைனியர்கள் ரெயிலில் ஏற விடுவதில்லை. இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு மீட்க வேண்டும் என்றார்.விக்ரம் என்ற மாணவர் கூறுகையில், உக்ரைனில் இருந்து அமெரிக்க போன்ற நாடுகள் அந்நாட்டினரை வெளியேற சொன்னது. 5 நாளாக பயணம் செய்து வந்துள்ளோம். கிழக்கு, மத்திய, மேற்கு என உக்ரைன் உள்ளது. கிழக்கு பகுதியில் உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
சதிஷ் என்பவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தன. ஆனால் கார்கிவ் பகுதியில் இருந்து போலாந்து, ருமேனியா, ஹங்கேரி போன்ற நாடுகள் வழியாக அழைத்து வர வேண்டும். இல்லை என்றால் ரஷ்யாவிடம் பேசி அதன் வழியாவது அழைத்து வர வேண்டும். சுமி என்ற பகுதியில் உணவில்லாமல் தவிக்கின்றனர். இந்திய தூதரக அதிகாரிகள் உணவு வழங்க வேண்டும்.
கிழக்கு பகுதியில் இருந்து எல்லைக்கு வந்துவிடுங்கள் என தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர். எல்லைக்கு ரெயில் வழியாக வந்துவிட்டோம். போலாந்து எல்லையில் வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் பிரச்சனை எழுப்புகின்றனர். 2 நாளாக காத்திருக்கிறோம். ஆனால் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர் என தெரிவித்தனர்.
Last Updated Mar 4, 2022, 12:10 PM IST
Source: https://tamil.asianetnews.com/politics/importance-for-north-indians-in-flights-the-students-who-came-to-chennai-were-shocking–r87jvc