தெரு பெயர் பலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் தெரு, சாலை பெயர்ப்பலகைகளில் சுவரொட்டி ஒட்டினால், காவல்துறையில் புகார் தெரிவித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க- பட்ஜெட் மீது விவாதம்: சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில் சென்னையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் விவரங்கள் குறித்த பலகைகளில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இந்த சுவரொட்டிகள் மாநகராட்சியின் பணியாளர்களால் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. இதுபோன்று பெயர் பலகைகளின் மீது சுவரொட்டி மற்றும் விளம்பரங்கள் செய்யும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் மீது காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மை
பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும், பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு திடக்கழிவுகள் சேகரிப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் மேற்குறிப்பிட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சியின் ஒருசில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளும், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலிருந்து கட்டிட கழிவுகளும், சாலைகளின் ஓரங்களில் கொட்டப்படுகின்றன.
இவ்வாறு குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதால் பல்வேறு விதமான சுகாதார சீர்கேடுகளும், கட்டுமான கழிவுகளால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களின் மீது ரூ.500/- மற்றும் கட்டுமான கழிவுகளை அங்கீகரிக்கப்படாத பொதுஇடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்களின் மீது ஒரு டன் வரை ரூ.2,000/- மற்றும் ஒரு டன்னிற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5,000/- அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 01.01.2022 முதல் 18.03.2022 வரை பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களிடமிருந்து ரூ.12,53,00/- அபராதமும், அங்கீகரிக்கப்படாத பொதுஇடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களிடமிருந்து ரூ.12,10,480/- அபராதமும் என மொத்தம் ரூ.24,63,780/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுஇடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/mar/19/chennai-corporation-has-warned-of-strict-action-against-those-putting-up-posters-on-street-name-boards-3810857.html