சென்னை: தமிழகத்தில் இன்று 2,707 அடுக்குமாடி குடியிருப்பு, சென்னை போலீசுக்கு 93 ரோந்து கார் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக அவர் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்து வருகிறார். அதன்படி இன்றும் தமிழகத்தில் வெவ்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இன்று திறந்து வைத்தார். நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, கோவை, திருச்சி, அரியலூர் உள்பட பல இடங்களில் கட்டப்பட்ட ரூ.270.5 கோடி மதிப்பிலான குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன.
மேலும் தாமாக வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை 23,826 பயனாளிகளுக்கு ஸ்டாலின் வழங்கினார். அதோடு 4,880 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையும், 938 பேருக்கு கிரயப்பத்திரங்களையும் ஸ்டாலின் வழங்கினார்.
8 மாதங்களில் எழுந்து நிற்கும் கலைஞர் நூலகம்.. 40 மாதங்களாக ஒற்றை செங்கல்லில் எய்ம்ஸ்: சு.வெங்கடேசன்
மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் அதனை சீர்செய்ய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை போலீசாரின் பயன்பாட்டுக்கு புதிதாக ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று 93 ரோந்து கார்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதுதவிர இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/cm-stalin-inaugurats-various-development-schemes-in-tamil-nadu-461609.html