ஹஜ் பயணம் புறப்பாடு சம்பந்தமாக டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் எழுப்பிய போது முதல்வரின் கடிதம் வரவில்லை என்று அமைச்சர் நக்வி சொல்லி விட்டார். பாஜக தலைவர் அண்ணாமலை ஹஜ் யாத்திரை பிரச்சினையை விட்டு விட்டார். தமிழ்நாடு முதல்வரின் கடிதம் வரவில்லை என்று குதூகலமாக பதிவிட்டுள்ளார். ஆனால் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதம் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படாமல் இருப்பதற்கு பிரதமர் அலுவலகத்தைத்தான் அண்ணாமலை கேட்கணும் என சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்..
சு.வெங்கடேசன் எம்.பி.யை ஒருமையில் பேசியதால் மனம் வருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க: கே.என்.நேரு
அண்ணாமலையின் ட்வீட்
தமிழகத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சென்னையிலிருந்து செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியபோது அப்படி ஒரு கடிதம் தனக்கு வரவில்லை என அமைச்சர் தெரிவித்திருந்தார். இதை பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு திமுக அரசு ஹஜ் யாத்ரிகர்களுக்கு சென்னையை புறப்பாடு மையமாக சேர்க்க மத்திய அரசுக்கு அரசு முன்மொழிவு அனுப்பவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகம் அனுப்பாமல் வைத்திருந்தால் அது தமிழக முதல்வர் குற்றமல்ல பிரதமர் அலுவலகம் அதை துறை அமைச்சருக்கு அனுப்பாமல் வைத்துள்ளது, ஆனால் அண்ணாமலை அதை திரிக்கிறார் என சு.வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
ஹஜ் பயணத்துக்கு சென்னையில் புறப்பாடு மையம்
“சென்னையில் ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு மையம் வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்பவர்களை கோவிட் காலத்தில் 700 கிலோ மீட்டர் கொச்சி வரை அலைய விடுவது சரியல்ல என்றும் நான் நவம்பர் 5, 2021 தேதி அன்று ஒன்றிய சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
அதற்கு நவம்பர் 17, 2021 தேதியிட்டு பதில் அளித்துள்ள அமைச்சர் இன்றைய வித்தியாசமான கோவிட் சூழலில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு, ஆகையால் அம் முடிவை ஏற்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.
சொன்ன காரணத்தை வைத்தே நிராகரித்த மத்திய அமைச்சர்
எந்த கோவிட்டை நான் காரணமாக சொல்லி அலையவிடாதீர்கள் என்கிறேனோ, அதையே காரணமாக சொல்லி சென்னைக்கு புறப்பாடு மையம் மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான நகரங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய அனைத்தும் புறப்பாடு மையங்களின் பட்டியலில் உள்ள போது இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் சென்னை ஏன் இல்லை? நீங்கள் சொல்கிற பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் சென்னையில் ஏன் செய்ய முடியாது? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் இல்லை.
தமிழக முதல்வர் கடிதம்
சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரையும் கலந்து ஆலோசித்து விட்டோம் என்று பதிலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக முதல்வர் அவர்கள் நவம்பர் 11, 2021 அன்று கடிதம் எழுதியுள்ளார். அவரிடம் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே கேரளா, கர்நாடகா மாநிலங்களின் ஹஜ் பயணிகள் சென்னையை புறப்பாடு மையமாகக் கொண்டு பயணித்துள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை, அமைச்சர் பதில்
இதுவெல்லாம் பொது வெளியில் செய்திகளாக கிடைக்கின்றன. இதை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் எழுப்பிய போது முதல்வரின் கடிதம் வரவில்லை என்று அமைச்சர் நக்வி சொல்லி விட்டார். பாஜக தலைவர் அண்ணாமலை ஹஜ் யாத்திரை பிரச்சினையை விட்டு விட்டார். தமிழ்நாடு முதல்வரின் கடிதம் வரவில்லை என்று குதூகலமாக பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலையின் பதிவுக்கு பதில்
அண்ணாமலை அவர்களே! முதல்வர் கடிதம் பிரதமருக்கு முகவரி இடப்பட்டு இருக்கிறது. “எனது அமைச்சகத்துக்கு கடிதம் வரவில்லை ” என்று அமைச்சர் மக்களவையில் சொன்ன பதில் தார்மீக ரீதியாக ஏற்புடைய பதில் அல்ல. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு முரண்பட்டது.
கடிதம் எழுதப்பட்டு 20 நாட்கள் ஆகியும் பிரதமர் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு பிரச்சனை கொண்டு செல்லப்படவில்லை என்றால் கேள்வி எழுப்பப்பட வேண்டியது பிரதமர் அலுவலகம் நோக்கித்தானே தவிர, முதல்வர் அலுவலகம் நோக்கியல்ல.
மத்திய அரசு சென்னையில் புறப்பாடு மையம் அமைக்க வேண்டும்
தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். திமுகவின் நாடாளுமன்றக்குழுவின் தலைவர் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் சம்பந்தப்பட்டவர்களை கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறி எங்களின் கோரிக்கையை நிராகரிக்கிறார் அமைச்சர். சென்னைக்கு ஹஜ் பயண புறப்பாட்டு மையம் இல்லை என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/departure-ep-from-chennai-for-hajj-su-venkatesan-m-p-criticizes-bjp-leader-annamalai-441316.html