சென்னை பல்கலை. துணைவேந்தராக வெளிமாநிலத்தவரை நியமிக்கவே தேடல் குழு தலைவராக ஜெகதீஷ் குமார்: ராமதாஸ் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வெளிமாநிலத்தவர் ஒருவரை நியமிக்கத்தான் தேடல் குழு தலைவராக ஜே.என்.யூ துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை ஆளுனர் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா?

சென்னை பல்கலைக்கழகத்திற்கு வெளிமாநிலத்தவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தேடல் குழு தலைவராக ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வெளிமாநில துணைவேந்தரை நியமித்ததால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழிவது போன்று சென்னை பல்கலை.யும் சீரழிந்து விடக்கூடாது!

தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் படிப்படியாக வெளிமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது. இந்த அணுகுமுறையை பல்கலைக்கழக வேந்தர் கைவிட வேண்டும். தமிழக அரசு இதை அனுமதிக்கக்கூடாது! இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/dr-ramadoss-opposes-to-appointment-of-jnu-jagdeesh-kumar-as-madras-univ-vc-seach-panel-chief-378938.html