சென்னையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: காவல் ஆணையர் அதிரடி உத்தரவு – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தலைநகர் சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடியின் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடந்த 22ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது.

இதனிடையே, கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசால் முடக்கப்பட்டது. அதில், தமிழகத்தை சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் இடம் பெற்றிருந்தன. தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடுமாறு உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

வீடு தேடிவரும் இலவச உணவு…. ‘மகிழ்ச்சி’ அறக்கட்டளையின் மகத்தான சேவை!!

இதனையடுத்து, நாட்டு மக்களிடையே மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கும் என தெரிவித்த மத்திய அரசு, இது தொடர்பான வழிகாட்டுதல்களையும் வழங்கியது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து மாநிலங்களும் தீவிரமாக பின்பற்றி வருகின்றன.

அதேசமயம், ஊரடங்கு உத்தரவானது மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்தது. இதற்கு விளக்கமளித்த மத்திய அமைச்சரவை செயலர், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் தற்போது வரை இல்லை என தெரிவித்தார்.

கொரோனா : சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையா?

இந்நிலையில், தமிழக தலைநகர் சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னையில் 144 தடை உத்தரவு வருகிற 15ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/144-imposed-in-chennai-will-be-extend-upto-april-15/articleshow/74929120.cms