இந்தியாவிலேயே சைபர் தாக்குதல்களில் அதிக பாதிப்பிற்குள்ளான நகரம் சென்னை: அதிர்ச்சி ரிப்போர்ட்! – தினமணி

சென்னைச் செய்திகள்

சைபர் தாக்குதல்கள்

சென்னை: இந்தியாவிலேயே சைபர் (இணைய வழி) தாக்குதல்களில் அதிக பாதிப்பிற்குள்ளான நகரமாக சென்னை இருப்பதாக அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த  சைபர் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘K7 கம்ப்யூட்டிங்’ 2020-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கான, ‘சைபர் அச்சுறுத்தல் கண்காணிப்பு அறிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவிலேயே சைபர் (இணைய வழி) தாக்குதல்களில் அதிக பாதிப்பிற்குள்ளான நகரமாக  42 சதவீதத்துடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக பாட்னா மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டும் 38 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளன. ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டும் 35 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன.

இந்த அறிக்கையின்படி இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவோர் அப்டேட் செய்யப்படாத மென்பொருள்கள் மற்றும் இயங்கு தளங்களின் வழியாகத்தான் இதனை மேற்கொள்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் 7  ஆகிய இரண்டு இயங்கு தளங்களுக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனமானது ஆதரவளிப்பதை நிறுத்தி விட்டதால் இதனைப் பயன்படுத்துவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.           

தனி நபர்களைப் பொறுத்தவரை மால்வேர் எனப்படும் தீங்கு செய்யும் மென்பொருள்கள் மூலம் உருமாற்றப்பட்ட போலியான செயலிகள், கொவிட்-19 தொடர்பான செயலிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது  காரணமாக அமைகிறது.

இந்த அறிக்கையில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முதல்கட்ட நகரங்கள் மட்டுமின்றி, பாட்னா, புவனேஷ்வர் ஆகிய இரண்டாம் நிலை நகரங்களும் அதிகபட்ச சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது ஆச்சர்யமாக கவனிக்கப்படுகிறது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/jun/23/chennai-worst-hit-by-cyber-attacks-in-india-report-3429037.html