சென்னை அண்ணாநகரில் அதிகபட்ச கரோனா நோயாளிகள் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னைக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பாதித்த 21,681 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 33 ஆயிரம் பேர் குணமடைந்த நிலையில் 846 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை சென்னையின் 15 மண்டலங்களிலும் ஒட்டு மொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு வந்த சென்னை மாநகராட்சி, நேற்று முதல் ஒவ்வொரு மண்டலத்திலும் கரோனா பாதித்து தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக 55 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 59.68% பேர் ஆண்கள், 40.32% பேர் பெண்கள். கரோனா பாதித்த 21 ஆயிரம் பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 33 ஆயிரம் பேர் குணமடைந்த நிலையில் 846 பேர் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கரோனா தொற்று பாதித்த பட்டியலில் இதுவரை ராயபுரம் முதல் இடத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் அடிப்படையில் பார்த்தால் அண்ணாநகரில்தான் அதிக கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அண்ணாநகரில் 2,946 பேரும், தேனாம்பேட்டையில் (09) 2,363 பேரும், ராயபுரத்தில் (05)  2,212 பேரும், கோடம்பாக்கத்தில் (10) 2,094 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில்லாமல் தண்டையார்பேட்டையில் (04) 1,770 பேரும், திருவிகநகரில் (06) 1656 பேரும்,  அடையாறில் (13) 1500 பேரும், திருவொற்றியூரில் (01) 1027 பேரும், வளசரவாக்கத்தில் (11) 1081 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/jun/30/maximum-number-of-corona-patients-in-anna-nagar-chennai-3431410.html