சென்னையில் புல்லட் வாகனத்தை குறிவைத்து திருடிய கும்பல் கைது – 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் புல்லட் வாகனத்தை குறிவைத்து திருடிய கும்பலை கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 34). வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது புல்லட் மோட்டார்சைக்கிள் கடந்த 19-ந்தேதி திருட்டு போனது. இதுதொடர்பாக பார்த்தீபன் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ஒரு கும்பல் புல்லட் மோட்டார்சைக்கிளை குறிவைத்து திருடிவருவது தெரியவந்தது. இதையடுத்து சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர் உத்தரவின்பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பார்த்தீபனுக்கு சொந்தமான புல்லட்டை ஓட்டி வந்தவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் உமருப்புலவர் தெருவை சேர்ந்த முகமது சபி (23) என்பதும், விருதுநகர் மாவட்டம் வீரசோழன் தெருவை சேர்ந்த அமீர்ஜான் (36), கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சிபி (23) ஆகியோருடன் சேர்ந்து புல்லட் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 புல்லட் உள்பட 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2020/10/04051259/Gang-arrested-for-stealing-bullet-vehicle-in-Chennai.vpf