கொரோனாவை மறக்க வைத்ததா ஆயுத பூசை, சென்னை அடுத்த கேரளாவா? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனாவை மறக்கத் தொடங்கும் மக்கள்!



கொரோனா பரவல் காரணமாக நாட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூழலில் விரைவில் கொரோனாவின் 2ஆம் அலை வீசத் தொடங்கும் எனச் சமீபத்தில் அரசு வெளியிட்ட அறிவிப்பு மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது. ஆனால், இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் கொரொனாவை மறந்து கூட்டம் கூட்டமாக வெளியே கடைகளுக்குச் செல்வதும் ஊர் சுற்றுவதும் எனத் தொடங்கிவிட்டனர்.

கொரோனா காலத்தில் சென்னை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி!



கொரோனா காலத்தில் மெத்தனப் போக்கின் உச்சமாகச் சென்னை மக்களே உள்ளனர் என்பது சமீபத்திய செய்திகள் மூலம் நாம் அறிய முடிகிறது. பூசை, விழாக்காலமான தற்போதைய நேரத்தில் மக்கள் கொரோனாவை முற்றிலுமாக மறந்துவிட்டனர். கொரோனா அச்சம் காரணமாக முட்டப்பட்டிருந்த கோயில்கள் கூட, ஊரடங்கில் கொண்டு வரப்பட்ட தளர்வுகள் காரணமாகத் திறக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டங்களுக்கும் தளர்வா?



தளர்வுகள் காரணமாக மக்கள் மனதில் மெத்தனப் போக்கு உருவாகிவிட்டது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் ஊரடங்கு தொடர்பாக அரசு உருவாக்கியுள்ள சட்டங்களின்படி, தனி மனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்றாலோ, கொரோனா பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் மக்கள் வெளியே வந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கிடுக்கிப்பிடி தேவை!



இந்த சட்டத்தைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் மீது, வணிக கடைகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் சென்னையில் சனிக்கிழமை ஒருநாளில் மட்டும் குறைந்தது ஒரு லட்சம் வழக்குகள் பதியப்பட்டிருக்க வேண்டும். அதேவேளை ஆயிரக்கணக்கான கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உயர் நீதிமன்ற வாசலிலே இந்த அவலம்!



இந்த அவலங்கள் எங்கு நடந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம். அதிகளவில் மாநகரில் மக்கள் கூடியது சென்னை உயர் நீதிமன்றத்தின் வாசலில் உள்ள எஸ்எஸ்சி சாலையில்தான் என்பதுதான் மிகவும் வேதனையளிக்கும் செய்தியாக உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி நடைபாதை மட்டுமின்றி சாலை முழுவதும் மனித தலைகள் மட்டுமே தெரிந்தன. 99 சதவீதம் பேர் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. பலர் முகக் கவசங்கள் கூட அணியவில்லை.

கேரளாவில் ஓணம், தமிழ்நாட்டில் இப்போது தசராவா?



கேரளாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, ஓணம் பண்டிகை காலத்தில் மீண்டும் அதிகரித்து இப்போது அங்குப் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை நோக்கிச் செல்கிறது. இப்போது சென்னையிலும் அதே நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் உருவாக்கும் இந்த ஆபத்தான சூழல் தொடர்பாகச் சென்னை மாநகராட்சி தொடர்ந்து விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வந்தாலும், பலன் எதுவுமில்லை.

பாதுகாப்பை எப்படி உறுதி செய்யப் போகிறோம்!



“நமக்கு எதிர்ப்புச் சக்தி உள்ளது, நம்மை கொரோனா என்ன செய்யப் போகிறது” என்ற எண்ணத்தோடே மக்கள் பலர் வெளியே சுற்றுத் தொடங்கிவிட்டனர். இதில் பலர், “எனக்கு எப்போதோ கொரோனா வந்து சென்றுவிட்டது போல்” என்றும் கூறிக் கொள்கின்றனர். நமக்கு எதிர்ப்புச் சக்தி இருந்தாலும் சரி, நோய்ப் பாதிப்பு வந்து சென்றாலும் சரி, இதுவரை பாதிப்பில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்கும் நமது குடும்பத்தாருக்கு எதோ ஒரு வகையில் நாம் நோயைக் கடத்திக் கொண்டு செல்லும் சூழலை நாம் உருவாக்கி விடக் கூடாது. இப்போதைய நேரத்தில் எது பாதுகாப்பு என்பதை நாம் அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். நாம் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தால் மட்டுமே நல்ல முறையில் கடவுளை வழிப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/similar-like-kerala-corona-risk-high-at-tn-capital-due-to-crowd/articleshow/78860600.cms