இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் எஸ்.ஐ அசோக் மற்றும் போலீஸார் சோலாப்பூர் மாவட்ட போலீஸாருடன் இணைந்து கொலையாளிகளைத் தேடிவந்தனர். அப்போது, கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களின் வாகனத்தை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் அந்த வாகனத்தை சினிமா காட்சிபோலத் துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது கொலையாளிகள் சென்ற வாகனம் மின்னல் வேகத்தில் சென்றது. உடனே தனிப்படை போலீஸாரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து விரட்டிச் சென்று அந்தக் காரை மடக்கினர். காருக்குள் இருந்த புனேவைச் சேர்ந்த கைலாஷ் (32), கொல்கத்தாவைச் சேர்ந்த ரவீந்தரநாத் கர் (25), விஜய் உத்தம் கமல் (28) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களையும் கார், மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், “இந்த வழக்கில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநில போலீஸார், சென்னை போலீஸாருக்கு உதவி செய்தனர். சித்தல்குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் மற்றும் அவரின் நண்பர்கள் என 3 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரித்தபோது 5 தடவை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குறித்து விசாரித்துவருகிறோம். இந்த வழக்கில் மேலும் 3 பேரைத் தேடி வருகிறோம்” என்றார்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-3-in-sowcarpet-triple-murder