மனித உரிமை ஆணைய உத்தரவும் அரசை கட்டுப்படுத்தும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு அரசைக் கட்டுப்படுத்தக்கூடியது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால், ஆணையம் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆணைய உத்தரவுகளை எதிர்த்து அரசும் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மனித உரிமை ஆணையத்துக்கு எதிராக வழக்கு

மாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தும் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கிறது.இந்த உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அரசை கட்டுப்படுத்தும்

மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்துமா? உள்பட பல்வேறு கேள்விகளுக்கு தீர்வு காண, இந்த வழக்குகள் நீதிபதிகள் வைத்தியநாதன் பார்த்திபன் மற்றும் எம்.சுந்தர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரைத்தார்.அதன்படி இந்த வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு என்பது அரசை கட்டுப்படுத்தக்கூடியது என்றும் அதை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தை நாடலாம்

மேலும், மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால், ஆணையம் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் மனித உரிமை ஆணையப் பரிந்துரைகளை, தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என தெளிவுபடுத்தியுள்ள நீதிபதிகள், அதே நேரத்தில் ஆணைய உத்தரவுகளை எதிர்த்து அரசும் நீதிமன்றத்தை நாடலாம் என விளக்கம் அளித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கலாம்

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்படும் உத்தரவில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே இழப்பீட்டை வசூலித்துக் கொள்ளலாம் என தெளிவுபடுத்தியுள்ள நீதிபதிகள், எவ்வளவு தொகை மற்றும் கால நிர்ணயம் குறித்து உரிய நோட்டீஸ் அனுப்பி முடிவு செய்து கொள்ளலாம் எனவும், மனித உரிமை ஆணையப் பரிந்துரையின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-said-human-rights-commission-order-restraining-the-state-411259.html