சென்னை: தொடரும் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் – சிக்கலில் பள்ளி நிர்வாகங்கள்! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 29.5.2021-ல் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் 2014-ம் ஆண்டு அண்ணாநகர் ஹெச் பிளாக், 1-வது மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த தற்காப்பு கலை பயிற்சியகத்தில் சேர்ந்து பயிற்சி வந்தேன். அதை கெபிராஜ் என்பவர் நடத்திவருகிறார். ஜூடோ போட்டிக்காக நாமக்கலுக்கு காரில் பயிற்சியாளர் கெபிராஜ் என்பவருடன் சென்றேன். பின்னர் காரில் திரும்பிவரும்போது பயிற்சியாளர் கெபிராஜ், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியில் சொன்னால் என்னை அவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார். எனவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் கெபிராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாலியல் தொல்லை

அதன்பேரில் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின்படி கெபிராஜ் (44) என்பவர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “பிஎஸ்.பி.பி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள், இந்நாள் பள்ளி மாணவிகள் புகாரளித்தன் பேரில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 29-ம் தேதி அண்ணாநகரில் உள்ள பி.எஸ்.பி.பி. பள்ளியில் ஜூடோ மாஸ்டராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது அவரிடம் பயிற்சி பெற்ற இளம்பெண் ஒருவர் புகாரளித்திருக்கிறார். அதுதொடர்பாக கெபிராஜ், அவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்.

Source: https://www.vikatan.com/news/crime/student-complaint-against-some-schools-in-chennai