ஐஐடி: ‘மர்ம மரணங்கள்’, திகில், திடீர் திருப்பங்கள் – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

ஐஐடியில் நடப்பதுதான் என்ன? தொடரும் மர்ம மரணங்கள்! விசாரணை தேவை… இவையெல்லாம் தமிழ் ஊடகங்களில் ஐஐடி மெட்ராஸ் தொடர்பாக வந்துள்ள தலைப்புச் செய்திகள்.

தமிழகத்தைப் பொருத்தவரை, கிண்டியில் உள்ள ஐஐடி என்பது மர்மமான ஒரு பகுதி. ‘ஐயர் ஐயங்கார் டெக்னாலஜி’ என்று பெயர் வைத்து அழைக்கும் அளவுக்கு பிராமணர்களின் கூடாரமாகத் திகழும் இடம். சாதி வெறி பிடித்து அலையும் கூட்டம் தமிழகமெங்கும் விரட்டி அடிக்கப்பட்டபிறகு தப்பித்துத் தழைப்பதற்கு உகந்த ஒரே இடமாக இருப்பது. தமிழக மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வராத ஒரு பிரதேசம். மத்திய அரசின் தயவினால் நடக்கும் இந்த இடத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். எனவே இங்கே சாதாரணமாக என்ன நடந்தாலும் அதனை அசாதாரணமான ஒன்றாக மாற்ற வேண்டும். கேள்விக் கணைகளைத் தொடுக்க வேண்டும். போராட்டம் நிகழ்த்த வேண்டும்.

ஆனால் உண்மை என்ன?

ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் கடந்த சில வருடங்களில் சில சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக நான்கைந்து விஷயங்களைச் சொல்லலாம். மிகச் சமீபமாக கடந்த பத்து நாள்களில் இரு விஷயங்கள் நடந்தன. ஓர் ஆராய்ச்சிப் பணியாளர், நீண்ட ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு உடல் பாதி எரிந்த நிலையில் இறந்துகிடந்தார். அவருடைய கடிதம் காவல்துறை கையில் இருக்கிறது. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
அதற்கு ஓரிரு நாள்கள் முன்னதாக, மனிதக் கலையியல் துறையைச் சேர்ந்த ஓர் உதவிப் பேராசிரியர், தான் நடத்தப்படும் விதம் சரியில்லை என்று பதவி விலகி, வேறொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஐஐடியும் சரி, அந்த நபரும் சரி, அதிகாரபூர்வமாகக் கருத்து சொல்லவில்லை, ஆனால் இணைய ஊடகங்களில் சில தகவல்கள் கசிந்துள்ளன. அவை ஊதிப் பெருக்கப்பட்டவையே தவிர அடிப்படையில் பெரிய விஷயம் ஒன்றுமே இல்லை. சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியர், வேலைக்குச் சேர்ந்தே இரண்டரை வருடம்தான் ஆகியுள்ளது. அதில் பெரும்பகுதி பெருந்தொற்று நோயில் கழிந்துள்ளது. அவரை யார் எந்த மாதிரித் துன்புறுத்தினார் என்று தகவல் தெரியாதவரை, அதைப் பெரிதாக்குவதில் பொருளே இல்லை.

இரு வருடங்களுக்கு முன், மனிதக் கலையியல் துறையில் படித்துக்கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவி தனக்குச் சரியான மதிப்பெண்கள் தரப்படவில்லை என்று சொல்லித் தற்கொலை செய்துகொண்டார். அவரை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் என்று மூன்று பேராசிரியர்களின் பெயர்கள் வெளியாகின. அதில் முக்கியமாகக் குறை சொல்லப்பட்டவர் ஒரு பிராமணர். இறந்தவரோ முஸ்லிம் பெண். உள்விசாரணைகள், காவல்துறை விசாரணை இரண்டிலும் இன்றுவரை குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்கள் வெளிவரவில்லை.

அதற்கு முன், உணவு உண்பது தொடர்பாக ஒரு தரப்பு மாணவர்களிடையே ஒரு பெரும் பிரச்னை வெடித்தது. சுத்த மரக்கறி உணவு உண்பதற்கான பகுதியில் இறைச்சியுடன் ஒரு மாணவர் போய் அமர்ந்ததாகவும் அவர் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

அதற்கும் முன்பாக, இரண்டு மாணவர் அமைப்புகள் தொடர்பாக ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்ற அமைப்பும் விவேகானந்தர் படிப்பு வட்டம் என்ற அமைப்பும் இந்தச் சர்ச்சையில் சிக்கின. பெயரை வைத்தே சொல்லிவிடலாம், முந்தையது திராவிட, தலித் கருத்தாக்கம் கொண்டது, பிந்தையது தேசியவாத, இந்துத்துவக் கருத்தாக்கம் கொண்டது என்று.

முந்தைய அமைப்பின் சில சுவரொட்டிகள், நிகழ்வுகள் ஆகியவை குறித்து, பிந்தைய அமைப்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்குப் புகார் அனுப்பியது. அதனை அடிப்படையாகக் கொண்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் ஐஐடி மெட்ராஸ் நிர்வாகத்துக்குத் தகவல் வேண்டி கடிதம் அனுப்ப, அதன் விளைவாக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம், வரம்புமீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டது. பின் பல திசைகளிலிருந்தும் கண்டனம் வர, அரசியல் கண்ணோட்டம் கொண்ட அனைத்து அமைப்புகளின் நடவடிக்கைகளும் பேராசிரியர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் நடக்குமாறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

அதற்கு முன் கணிதத் துறையைச் சேர்ந்த வசந்தா கந்தசாமி (தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார்) என்ற பேராசிரியர், தன்னை நிர்வாகம் சரியாக நடத்தவில்லை, சாதியக் கண்ணோட்டத்தில் தனக்கான பதவி உயர்வுகளைத் தரவில்லை என்று பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவந்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்குகளையும் நடத்தியுள்ளார்.

ஐஐடி மெட்ராசும் சாதியமும்

ஐஐடி மெட்ராஸில் சாதியம், மிகவும் குறிப்பாக பிராமண ஆதிக்கம், தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் மீதான வெளிப்படையான கேலி, கிண்டல், தாக்குதல் ஆகியவை குறித்துச் சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன, கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஐஐடியில் பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாக சமூக நீதி நிலவுவதில்லை என்றும் பிராமணர்கள் மட்டுமே வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. சிலர், பிராமணர்கள் என்பதற்கு பதில் உயர்சாதியினர் என்று சொல்வதுண்டு, ஆனால் பெரும்பாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் பிராமணர்களைக் குறிவைத்தே சொல்லப்படுகின்றன.

இவற்றை ஆராய்வோம்.

மர்ம மரணங்கள் போன்றவையெல்லாம் ஊடகங்களின் அபத்தக் கண்டுபிடிப்புகளே. ஐஐடிகள் மட்டுமல்ல, இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பு அழுத்தம் காரணமாகவும் புதிய சூழல், குடும்பப் பிரச்சினை, பணப் பிரச்சினை போன்றவை காரணமாகவும் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது படிப்பு அழுத்தம் இல்லாத தமிழகத்தின் அரசுப் பொறியியல் கல்லூரிகளிலும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலுமே நடந்துள்ளது. ‘தொடரும் மர்ம மரணங்கள்’ என்று தலைப்பிட்டு ஒரு நாள்கூட வாரப் பிரதிவாதங்கள் நடந்ததில்லை.

ஐஐடி மாணவர்கள் வளாகத்திலேயே தங்கிப் படிக்க வேண்டும் என்பது கட்டாயம். கிராமப்புறப் பின்னணியிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல, நல்ல நகரப் பின்னணியில், வசதியான குடும்பத்திலிருந்து வருபவர்கள்கூடப் பல நேரங்களில் நிலைதடுமாறக்கூடிய நிகழ்வுகள் நடக்கலாம். இவற்றை எதிர்கொள்வது எப்படி, என்ன இருந்தாலும் தற்கொலை ஏன் ஒரு தீர்வு கிடையாது போன்றவற்றைச் சொல்லி வழிகாட்ட உளவியல் ஆலோசகர்கள் தேவை. ஐஐடிகள் அதிக எண்ணிக்கையில் இவ்வகை ஆலோசகர்களை நியமிப்பதே நன்மை பயக்கும்.

முப்பெரும் சர்ச்சைகள்

இதனை விடுத்துவிட்டுப் பார்த்தால் மூன்று பெரும் சர்ச்சைகளை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்:
1. சாதியப் பாகுபாடு
2. உணவுப் பாகுபாடு
3. அரசியல் நிலைப்பாடும் மாணவர்களின் செயல்பாடும்

இந்தியாவில் உணவு என்பது ஒருசில மக்கள் குழுக்களிடையே பெரும் மோதலை ஏற்படுத்திவருகிறது. இது கல்வி நிலையத்திலும் நிகழ்வது சாத்தியமே. இதுவும் சாதியத்தோடும் அரசியலோடும் தொடர்புடையதே. ஐஐடி சென்னையில் தனித்தனி தங்குவிடுதிகள் இருந்துவந்தன. ஒவ்வொரு விடுதியிலும் உணவகம் உண்டு. அடிப்படை உணவு, மரக்கறி சார்ந்தது. அவ்வப்போது இறைச்சி உணவு தனியாகப் பரிமாறப்படும். அதனை வாங்கி உண்ணும் மாணவர்கள் சுற்றி உள்ளோர் விருப்பத்துக்கு ஏற்ப, தனியாகவோ சேர்ந்தோ உண்பார்கள். விருப்பம் இல்லாதவர்கள் தள்ளி வேறோர் இடத்தில் அமர்ந்துகொள்ளலாம்.

அதன்பின், தங்குமிடம் தனியாகவும் உணவு உண்ணும் இடம் தனியாகவும் வசதிகள் ஏற்பட்டன. அப்போது மரக்கறி உண்போருக்காண இடங்கள் தனித்தனியாக ஒதுக்கப்பட்டன. இந்தியாவெங்கும் மரக்கறி உணவகம், மரக்கறியும் இறைச்சியும் சேர்ந்து கிடைக்கும் உணவகம் என்று உணவகங்கள் இரண்டாகப் பிரிந்திருப்பதைப் பார்க்க முடியும். இது எவ்வகையிலும் சிக்கலை ஏற்படுத்தாத ஓர் அமைப்பு. ஆனால் அரசியல் இதில் கலக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.

பன்மைத்தன்மையை உருவாக்க வேண்டும்

ஐஐடியில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான ஒதுக்கீடுகள் சரியாகவே பின்பற்றப்படுகின்றன. சாதிய நோக்கில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரை உயர் சாதி மாணவர்கள் துன்புறுத்துகிறார்களா என்றால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல் பேராசிரியர்கள் இந்த மாணவர்களைத் துன்புறுத்துகிறார்களா என்றால் அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால் ஐஐடியில் பேராசிரியர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. 2019இல், மத்தியக் கல்வி நிலையங்கள் (2019) சட்டம் இயற்றப்பட்டது. அதில் ஐஐடி உட்பட அனைத்துக் கல்வி நிலையங்களிலும் பேராசிரியர் இடங்களுக்கும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அரசு நியமித்த நிபுணர் குழு, 23 ஐஐடிகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. மேலும் ‘உயர்நிலை சிறப்புத் தகுதி’ பெறும் கல்வி நிலையங்கள் எதுவாயினும் அதற்குப் பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸுக்கு இந்தத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பேராசிரியர் நியமனங்களில் பிற ஐஐடிகள் இட ஒதுக்கீடு செய்யவேண்டிவந்தாலும் ஐஐடி மெட்ராஸ் அதனைப் பின்பற்றத் தேவையில்லை.

இது சரியா, தவறா என்ற விவாதம் வேறு. ஆனால் இதன் காரணமாக ஐஐடி சென்னைக்குத் தமிழகத்தில் கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. பேராசிரியர்கள் பரந்துபட்ட சமூகத்திலிருந்து வந்திராத நிலையில் அவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களிலிருந்து வந்திருக்கும் மாணவர்களை எவ்வாறு நடத்துவார்கள் என்ற கேள்வி வெளிப்படையாக எழுவது நியாயமே. ஐஐடி இதனைக் கருத்தில் கொண்டே, பேராசிரியர்கள் மாணவர்களை நுண்ணுணர்வுடன் நடத்த வேண்டும் என்று ஆணையிட்டிருப்பதாக உள்ளிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக வளாகங்களில் மாணவிகள்மீதான பாலியல் சுரண்டல்கள் நடைபெற்றுவரும் நிலையில், gender sensitivity, caste/class sensitivity போன்றவை தொடர்பாக நிறையப் பேசப்பட்டுவருவதாகவும் தகவல். இவையெல்லாம் செயல்பாட்டில் வருவதற்குச் சில காலம் ஆகலாம்.

அரசியல் நிகழ்வுகளைப் பொருத்தவரை மாநில அரசின்கீழ் உள்ள எந்த நிறுவனத்திலுமேகூட மாணவர்கள் அரசியல் பேசிவிட முடியாது. இதுதான் தமிழகத்தில் நிலை. அனைவரும் ஜேஎன்யூவை (அதுவும் மத்திய அரசின்கீழ் இயங்கும் நிறுவனம்) அடிப்படையாக வைத்து, அதேபோல அரசியலாக்கப்பட்ட மாணவர்களைக் கொண்டதாக அனைத்துக் கல்வி நிலையங்களையும் நினைத்துக்கொள்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்திலோ, கிண்டி பொறியியல் கல்லூரியிலோ, ஆளும் மாநில அரசைப் பற்றி முணுக் என்று பேசக்கூட முடியாது. ஆனால் சென்னை ஐஐடியில் ‘மோடி ஒழிக’ என்று கோஷம் எழுப்பப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கான சாத்தியக்கூறு சிறிதுகூட இல்லை.

நேரடி கட்சி அரசியலைப் பிரதிபலிக்கும் விஷயங்களில் இறங்காமல் கொள்கைகள் சார்ந்து கூட்டம் கூட, கலந்துரையாட, எழுத்து வடிவில் பிரசுரிக்க, ஓரளவுக்கு உரிமைகள் உள்ளன. ஆனால் இதன் காரணமாக, எதிரெதிர் மாணவர் அமைப்புகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும் உருவாகிவருகின்றன. ஐஐடியில் மனிதக் கல்வியியல் துறை பெரிதாக வளர்ந்த காரணத்தாலேயே இம்மாதிரியான மோதல்கள் உருவாவதாகவும் இந்தத் துறையையே இழுத்துமூட வேண்டும் என்றும் சில குரல்கள் எழும்பியுள்ளன.

ஐஐடிகள் பன்மைத்தன்மையை நோக்கிக் கட்டாயம் செல்லவேண்டும். ஆனால் தன் தரத்தைக் குறைக்காமல் இதனைச் செய்ய வேண்டும். பெண்கள், கிராமப்புற மாணவர்கள், சிறுபான்மையினர் ஆகியோரை அதிகம் சேர்த்துக்கொள்ள முனைய வேண்டும். ஏற்கெனவே பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இம்மாணவர்களை வரவேற்கும் விதமாக ஐஐடி வளாகங்கள் மாற வேண்டும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இதற்கெனப் பல செயல்பாடுகளைச் செய்கிறார்கள். அவற்றிலிருந்து ஐஐடிகள் பாடம் கற்பது நல்லது.

மாணவர்களின் அரசியல் செயல்பாடுகளைப் பொருத்தவரை, அவற்றைக் கட்டுப்படுத்தி, மிகக் குறைவாக வைத்திருப்பதே நல்லது என்று நான் கருதுகிறேன்.

பேராசிரியர் நியமனத்தில் கடுமையான இறுக்கம் தேவையில்லை என்பதே என் கருத்து. இங்கும் பன்மைத்தன்மை அவசியம். வெவ்வேறு பின்னணியில் பேராசிரியர்கள் இருந்தால்தான், அவர்கள் வெவ்வேறு மாணவர்களுக்குப் பின்பற்றக்கூடிய மாதிரிகளாகத் திகழ்வார்கள். ஒற்றை வார்ப்பிலான ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு கல்வி வளாகத்தின் வளர்ச்சிக்கோ, தேசத்தின் வளர்ச்சிக்கோ, சமூகத்தின் இசைவுக்கோ உதவா.

இவற்றையெல்லாம் முன்வைக்கும் அதேநேரம், தமிழக ஊடகங்கள் பேசுவதைப் போல மர்மமான முறையில் ஐஐடி சென்னையில் ஏதும் நடப்பதில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/media-has-blown-iit-madras-related-issues-out-of-proportion/articleshow/84227553.cms