சென்னை: சென்னை அம்பத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கணவன், மனைவிக்கு பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரபுகுமார் (40). இவரது மனைவி விமலா(35). இந்த தம்பதியினர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பிரபுகுமார் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு, விமலா வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று உள்ளார்.
வீட்டை உடைத்தனர்
அப்போது, இவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஆணும், பெண்ணும் புகுந்து வீட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். அப்போது, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து குடியிருப்புவாசிகள் ஓடி வந்துள்ளனர்.
விசாரணை
பின்னர், அவர்கள் இருவரை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து பிடித்தனர். பின்னர், குடியிருப்போர் விமலாவுக்கு தகவல் கொடுத்து வீட்டுக்கு வர வைத்தனர். அதன்பிறகு, அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
கணவன் மனைவி
அதில், அவர்கள் திருவள்ளூர் அருகே கடம்பத்தூர், கசவா நல்லாத்தூர் கிராமத்தைச் சார்ந்த கருணாபிரபு (36), அவரது மனைவி சௌமியா (36) ஆகியோர் என்பது தெரியவந்தது.
வேறு திருட்டுக்கள்
இதனை அடுத்து, புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர், போலீசார் தம்பதியினர் வேறு ஏதேனும் குற்ற செயல்களில் செய்யப்பட்டுள்ளாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-husband-and-wife-who-were-involved-in-a-robbery-attempt-in-apartment-428076.html