சென்னை: சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் வழங்க சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்குவது குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வங்கி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
அதிரடி அறிவிப்பு: சென்னை ஓஎம்ஆர் சாலையில் சுங்க வரி நிறுத்தம்: எங்கெங்கு சுங்கச்சாவடிகள் நீக்கம்?
ரூ.10,000 வரை கடன்
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் திருப்பி செலுத்தக்கூடிய வகையில் பணி மூலதன கடனாக ரூ.10,000 வரை வழங்கும் திட்டம் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் பாரத பிரதமரின் ஆத்ம நிற்பார் நிதி(சுயசார்பு) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
தவணை முறை
இந்த கடன் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு தவணை முறையில் திருப்பி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காலாண்டுக்கு ஒருமுறை 7 சதவிதம் வட்டி மானியமும், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஊக்க தொகையாக மாதம் ரூ.100 வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மணடலங்களில் தினசரி 30 முதல் 40 எண்ணிக்கையில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு விண்ணப்பபம் செய்து வருகின்றனர்.
உரிய நடவடிக்கை
இந்த நாள் வரை 94,430 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு 35,398 விண்ணப்பங்கள் வங்கிகள் மூலம் கடன் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 29,706 சாலையோர வியாபரிகளுக்கு ரூ.10,000 வீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற வங்கி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் உதவி வழங்குவது உறுதி செய்யவும் ஒரு சில காரணங்களுக்காக கடன் தொகை அனுமதிக்க இயலாமல் வங்கிகளால் திருப்பப்பட்ட விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்து அவர்களுக்கும் கடன் தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொளளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
சாலையோர வியாபாரிகள்
மேலும், வங்கி கடன் உதவி பெற விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன் தொகையை விரைவாக வழங்க வங்கி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-has-decided-to-provide-bank-loans-to-roadside-traders-431199.html