சென்னையில் பதுங்கியிருந்த ஜார்கண்ட் மாவோயிஸ்ட் இயக்க நிர்வாகி கைது – தினமணி

சென்னைச் செய்திகள்

கைது செய்யப்பட்ட சுகூர் கஞ்சி

சென்னை: சென்னை அருகே எண்ணூரில் தங்கி கட்டுமானத் தொழிலாளியாக பதுங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுகூர் கஞ்சி (40). ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்ட் இயக்க நிர்வாகியான இவர், பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜார்கண்ட் மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்து, அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் எண்ணூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு கட்டுமானத்தில் கூலித் தொழிலாளியாக தங்கியிருந்து தனியார் கட்டுமான பணியில் ஈடுபட்டிருப்பதாக ஜார்க்கண்ட் மாநில போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸாருக்கு ஜார்க்கண்ட் மாநில போலீசார் தகவல் அனுப்பினர். இதன் அடிப்படையில் எண்ணூர்        போலீஸார்,சம்பவ இடத்துக்கு புதன்கிழமை அதிகாலை சென்று  சுகூர் கஞ்சியையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகூர் கஞ்சு மீது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு கொலை வழக்கு ஒரு கொலை முயற்சி வழக்கு ஒரு வெடிகுண்டு வழக்கு என மொத்தம் 13 வழக்குகள் உள்ளன இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியாக  இருப்பதும் போலீஸார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகூர் கஞ்சு, தனது செல்லிடப்பேசி மூலம் சென்னையிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் தனது மனைவியிடம் பேசியுள்ளார். இதை நோட்டமிட்ட ஜார்க்கண்ட் மாநில காவல்துறை  சென்னை காவல் துறைக்கு தகவல் அளித்து, எண்ணூர் போலீஸார் மூலம் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் உள்பட வடமாநிலங்களில் சுகூர் கஞ்சியை கைது செய்வதற்கு பல்வேறு நடவடிக்கை வந்தனர். அதிலிருந்து தப்பிப்பதற்காக சென்னையில் அவர், 6 மாதங்களாக பதுங்கி இருந்து தெரியவந்தது.
 இதற்காக அவர், எண்ணூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமானத்தில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்து இருப்பதும், அதற்காக சில போலி ஆவணங்களை அந்த நிறுவனத்திடம் சமர்ப்பித்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/oct/27/jharkhand-maoist-executives-arrested-in-chennai-3725052.html