சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கத்தைவிட அதிகமாக இந்த வட கிழக்கு பருவமழை காலத்தில் மழை கொட்டி வருகிறது. சென்னை சற்று நிம்மதி பெருமூச்சு விடும் நிலையில், 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சத்தீஸ்கரில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.. ஆனா அரசுக்கு 1000 கோடி இழப்பு
காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்கள்
பிற தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்கள்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஓட்டி இருக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஓட்டி இருக்கும்.
மழை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ், சோழவரம், நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அதிகபட்சமாக தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதிகள் குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென்மேற்குவங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள். தமிழக கடலோர பகுதிகள் அதனை, ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rains-in-7-districts-in-tamil-nadu-today-chennai-meteorological-department-440020.html