சென்னை: சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை ஓயப் போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னை ரெயின், சென்னை வெதர் போன்ற முன்னணி தனியார் வானிலை ஆய்வு நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
பல பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில் இந்த தகவல் சென்னைவாசிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் நான்கு முறை மட்டும்தான் நவம்பர் மாதத்தில் 1,000 மில்லி மீட்டர் அளவுக்கு மேல் மழை பதிவாகியிருக்கிறது .
தமிழகத்தில் கன மழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் பெருசா போகுதே
கன மழை
2015ஆம் ஆண்டு இதே போல மழை பதிவான நிலையில் இப்போது இந்த வருடம் மீண்டும் அதுபோன்ற கனமழை பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளிலும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கூடுவாஞ்சேரி உள்ளிட்ட தெற்கு சென்னையின் பல பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
படகுகள்
மக்கள் படகுகளை பயன்படுத்தி வெளியில் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் .போதும் போதும் என்ற அளவுக்கு மேல் மழை பெய்து விட்டதால் எப்போது மழை நிற்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.
மேக கூட்டங்களால் மழை பெய்யும்
இந்த நிலையில் தான் பல தனியார் வானிலை ஆய்வு நிபுணர்களும் சென்னைக்கு இன்று இரவுடன் மழை குறையத் தொடங்கிவிடும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். முதலில் சென்னை வெதர் என்ற தனியார் ஆய்வு அமைப்பு கணிப்பை பார்க்கலாம்- இதுபற்றி அவர்கள் கூறுகையில் , ஏற்கனவே எதிர்பார்த்தபடி நவம்பர் 26 முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை நல்ல மழை பொழிவு இருந்தது அடுத்த இரண்டு நாட்களுக்கு அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இன்று கூட சென்னையை கடந்து செல்லும் சில மேகக்கூட்டங்கள் காரணமாக அப்போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் இன்று இரவு முதல் சென்னையில் படிப்படியாக மழை குறைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெதர்மேன்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது கணிப்பில் கூறுகையில் டிசம்பர் 1ஆம் தேதி வரை அவ்வப்போது லேசான மழை இருக்கக் கூடும் ஆனால் மோசமான கனமழை ஓய்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறுகையில், நவம்பர் 29ம் தேதி இரவு முதல் சென்னையில் மழை அளவு குறையத் தொடங்கிவிடும். ஒட்டுமொத்தமாகவே இனிமேல் சென்னையில் மழை குறையும் என்று தெரிவித்துள்ளதோடு, சாட்டிலைட் படம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.
ஒரே கருத்து
முன்னணி தனியார் வானிலை ஆய்வாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். எனவே சென்னை மக்கள் இனிமேல் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.
பாதிப்பு சரி செய்யப்பட வேண்டும்
அதேநேரம், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இன்னும் வேகமாக மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் வெள்ளநீர் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/rain-will-get-reduced-in-chennai-from-today-says-tamil-nadu-weatherman-pradeep-john-and-chennai-rai-440669.html