சென்னை: சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் இன்று முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. தினமும் பாதிப்பு 30,000-க்கும் மேல் சென்றது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கொண்டு வரப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி குவிந்த மக்கள்.. மாஸ்க் அணியாமல் திரண்டதால் அச்சம்
தொடர்ந்து குறையும் கொரோனா
சென்னையில் கொரோனா அதிகரித்து வந்ததால் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு அனைத்து நாட்களும் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் எந்த அளவுக்கு கொரோனா வேகமாக பரவியதோ அந்த அளவுக்கு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
கடற்கரைகளுக்கு செல்லலாம்
இதேபோல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி(இன்று) முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
களைகட்டிய மெரினா
இந்த நிலையில் சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் இன்று முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னைவாசிகள் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளுக்கு காலை முதல் செல்ல தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரை வர தொடங்கியுள்ளனர். இதேபோல் கடற்கரைக்கு வந்து சிறுவர்கள் விளையாடுகின்றனர்.
ஆனால் சில கண்டிஷன்
உடற்பயிற்சி செய்பவர்களும் மெரினா கடற்கரைக்கு வந்து செல்ல தொடங்கியுள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் லைட் ஹவுஸ் வரை ஏரளாமனோர் நடை பயிற்சி செய்து வருகின்றனர். கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-beaches-has-opened-the-public-from-today-447247.html