சென்னை: கள்ளத் தொடர்பை விட மறுத்த வாலிபர் கொடூர கொலை..! – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் மனைவியுடனான கள்ளத் தொடர்பை விட மறுத்த குளிர்சாதன மெக்கானிக்கை கொலை செய்த வழக்கில் 4 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

சென்னை,

சென்னையை அடுத்த ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரையில் கழுத்து மற்றும் மர்ம உறுப்பு அறுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் பிணமாக கிடப்பதாக பள்ளிகரனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின் பேரில் சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஜல்லடியன்பேட்டை நெசவாளர் நகர் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த குளிர்சாதன மெக்கானிக்கான நரேஷ்(29) என தெரிய வந்தது. நரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அண்ணா சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் நரேஷை வழிமறித்து அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்தது என தெரியவந்தது. 

இது குறித்து பள்ளிகரனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் (28) என்பவரின் மனைவியுடன் நரேஷுக்கு கள்ள தொடர்பு இருந்ததாகவும், கடந்த 6 மாதங்களாக எச்சரித்தும் கள்ள உறவை விட மறுத்ததால் அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நரேஷை கொலை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து அருண்பாண்டியன் அவரது நண்பர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அருண்பாண்டியன், அவனது நண்பர்கள் திலீப் என்ற அஜீத்(27), அருண்(27), சஞ்சய்(27) ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/03/21202323/In-Chennai-a-young-man-who-refused-to-have-a-fake.vpf