சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் – தொழில்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தொழில்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

விமானப் போக்குவரத்தில் எதிர்கால தேவையென மதிப்பிட்டுள்ளதை எதிர்கொள்வதற்கும், நீண்டகால அடிப்படையில் விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், சென்னை அருகே ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையத்தை நிறுவ மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக தொழில் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய பன்னாட்டு விமான நிலையத்தை உருவாக்குவதற்கு சாத்தியமுள்ள இடங்களை அடையாளம் காணுவதற்கான பணியை அரசு, டிட்கோவிடம் ஒப்படைத்திருக்கிறது. இதன்படி, சாத்தியமுள்ள நான்கு இடங்களை டிட்கோ தேர்வு செய்து, இவ்விடங்களில் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்தை கேட்டுக்கொண்டது. 

இந்த நான்கு இடங்களையும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகளின் குழு பார்வையிட்டு, அதன் சாத்தியக்கூறு அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பொருத்தமான இடம் இறுதி செய்யப்பட்டு, புதிய விமான நிலையத்தை நிறுவுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தொழில்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://www.dailythanthi.com/News/State/2022/04/20054557/New-International-Airport-near-Chennai–Information.vpf