சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி குளிப்பதை தடுப்பதற்காக, டிரோன்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக மெரினா பீச் திகழ்ந்து வருகிறது… இந்த கடற்கரையில் தினமும் ஏராளமான மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பொழுதை கழித்து மகிழ்கின்றனர்..
பலர் பீச் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர்… அதேபோல வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மெரினா பீச்சுக்கு சுற்றிப் பார்க்க வந்து கடலில் குளித்து மகிழ்வது வழக்கமாக இருந்து வருகிறது.
சென்னை
கடந்த 3 வருட காலமாகவே தொற்று பாதிப்பு சென்னையில் இருந்து வந்ததால், அவ்வப்போது, மெரினா பீச் பூட்டப்பட்டது.. பிறகு தொற்று முழுமையாக நீங்கியதும், பொதுமக்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்… இந்நிலையில் அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து மெரினாவில் தடையை மீறி குளிக்க செல்பவர்கள் பலர் பலியாகியுள்ளனர்… அதன் அடிப்படையில் கடந்த 2 வருடங்களில் மட்டும் மெரினாவில் குளிக்கச்சென்று 34 பேருக்கு மேலாக மூழ்கி பலியாகி உள்ள சோகம் நிகழ்ந்துள்ளது..
பீச் மணல்
அதிலும், சமீப நாட்களாக கடலின் சீற்றம் மற்றும் கடலில் உள்ள மணற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கடலில் குளிக்க இறங்கும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டும், சுழலில் சிக்கியும், மணலுக்குள் சிக்கியும் உயிரிழக்கும் துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.. இதன்காரணமாக, மெரினா கடற்கரை பகுதியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது…
கண்காணிப்பு
தடை உள்ளதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளும் பீச்சில் ஆங்காங்கே போலீசாரால் வைக்கப்பட்டுள்ளது… அப்படி இருந்தும், தடையை மீறி, போலீசாரின் கண்காணிப்பையும் தாண்டியும், பொதுமக்கள் கடலில் குளித்து வருகின்றனர்… எந்தவிதமான ஆபத்தையும் இவர்கள் உணர்வதில்லை என்றே கூறப்படுகிறது..எனவே, கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், டிரோன் மூலம் காண்காணிப்புப் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பீச்சில் டிரோன்
இறப்பு சம்பவங்களை தடுக்கவே, இந்த டிரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை சென்னை போலீஸ் கையில் எடுத்துள்ளது.. அந்த வகையில், காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை ஒட்டிய பகுதிகள் முழுவதுமாக டிரோன்களை பறக்கவிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தன்னுடைய கண்காணிப்பு நடவடிக்கையையும் இன்றே தொடங்கிவிட்டது.. டிரோன்களைப் பயன்படுத்தி மெரினா கடற்கரை எல்லையில் பொதுமக்கள் யாரேனும் குளிக்க எண்ணி கடலுக்குள் இறங்கியுள்ளனரா? என்று டிரோன் மூலம் போலீஸ் கண்காணித்து வருகிறது..
பெசன்ட் நகர்
மெரினாவை தவிர, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் திருவான்மியூர் கடற்கரை ஆகிய பகுதிகளிலும், இந்த டிரோன் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது… மேலும், கடலில் குளிப்பவர்களை கண்காணிப்பது மட்டுமல்லாமல், மெரினாவில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கும் விதமாகவும் இத்தகைய டிரோன்களை பறக்கவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/happy-news-for-chennai-and-drone-surveillance-by-police-at-marina-beach-465364.html