சென்னை: இந்தியா முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ, அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பினரும், எஸ்டிபிஐ அமைப்பினரும் சென்னை புரசைவாக்கத்தில் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், பயிற்சி அளித்தல், தடை செய்யப்பட்ட அமைப்புகளில் ஆட்களை சேர்த்தல் உள்ளிட்ட புகாரின் பேரில் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பிற்கு சொந்தமான அலுவலகங்களிலும் அதன் நிர்வாகிகளின் வீடுகளிலும் அதிகாலை 3 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
நிதி திரட்டுதல் விவகாரம் என்பதால் அமலாக்கத் துறையும் இந்த சோதனையில் இணைந்து கொண்டது. நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடலூர், தேனி, கோவை மாவட்ட நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 100 பேர் கைது
100 பேர் கைது
மேலும் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் இந்த அமைப்பினரின் வீடுகள் , அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், சென்னை, ராமநாதபுரம், கோவை, நெல்லை, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
ரெய்டு
இந்த நிலையில் ரெய்டை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை புரசைவாக்கத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்பினர் சாலை மறியல் செய்து வருகிறார்கள்.
அசம்பாவிதங்கள்
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க புரசைவாக்கத்தில் மறியல் நடக்கும் இடத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தற்போது ரெய்டு நடந்து வரும் புரசைவாக்கம் அலுவலகத்தில் அதன் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் அவர்களுடைய சொத்து விவரங்கள், வாகன பயன்பாடு, அந்த வாகனம் எப்படி வாங்கப்பட்டது உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
கொரோனா காலத்தில்
இந்த நிலையில் சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் கூறுகையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது வேண்டுமென்றே தவறான பிம்பத்தை சித்தரித்து ரெய்டு நடத்தி வருகிறார்கள். அடிப்படை ஆதாரமே இல்லாத ஒரு குற்றச்சாட்டின் பேரில் நடத்தி வருவதாக சொல்கிறார்கள். ஏதோ எங்களை தீவிரவாத அமைப்பு போல் மடைமாற்றும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். கொரோனா காலத்தில் ஜாதி, மதம் பார்க்காமல் கொரோனா பாதித்த எத்தனையோ சடலங்களை நாங்கள் நல்லடக்கம் செய்தோம். இப்படி நல்ல விஷயங்களை செய்து வரும் எங்கள் மீது வீண் பழி போட்டு எங்கள் அமைப்பை ஒடுக்க நினைக்கிறார்கள் என தெரிவித்தார்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/popular-front-of-india-in-chennai-conduct-road-roko-476926.html