விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த ஏரிகள் நிரம்பினால் தான் சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும்.

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு, விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தமாக 6 ஆயிரத்து 871 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. குறிப்பாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 240 கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 80 கனஅடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 100 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளது. மேலும் மழை தொடர்ந்து நீடித்தால் இந்த ஏரிகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி 78 சதவீதம் நிரம்பி காணப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645மி.கனஅடி ஆகும். ஏரியில் தற்போது 2,860 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. ஏரியில் தற்போது 2,678 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 80 சதவீதம் ஆகும். ஏரியில் இருந்து 196 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. ஏரியில் தற்போது 669 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

ஏரிக்கு 240 கனஅடி தண்ணீர் வருகிறது. 55 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடி. இதில் 164 கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 26 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுகொள்ளளவான 500 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது இந்த ஏரி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு வரும் 96 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஆக மொத்தம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு, தொடர் மழை காரணமாக மொத்தமாக இன்று காலை நிலவரப்படி 542 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Source: https://www.dinakaran.com/news_detail.asp?Nid=806238